4102. கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங்
 

     காட்டுளார் நாட்டுளா ரெனவும்
வழியுளா ரெனவு மலையுளா ரெனவு
     மண்ணுளார் விண்ணுளா ரெனவும்
 சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார்
     தொண்டர்வாய் வந்தன சொல்லும்
பழியுளார் போலும் பந்தணை நல்லூர்
     நின்றவெம் பசுபதி யாரே.              2

     2. பொ-ரை: இறைவன் கடற்கழியில் உள்ளார். கடலிலே
உள்ளார், காடுகளில் உள்ளார். நாடுகளில் உள்ளார். விண்ணுலகத் திலே உள்ளார். நீர்ச்சுழிகளில் உள்ளார். இவ்வாறு அவர் எல்லா
இடத்திலும் இருப்பவர் என்று சொல்லப் பெற்றாலும், அவ்வாறு
இருக்கும் அடையாளம் பிறர் எவராலும் அறியப்படாத தன்மையர்
ஆவார். இவ்வாறு தொண்டர்களின் போற்றுதலுக்கும்,
வணக்கத்திற்குமுரிய சிவபெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.

     கு-ரை: தொண்டர் கூற்றுக்கள் ஒன்றோடு ஒன்று
ஒவ்வாமைக்குக் காரண பூதராய் இருத்தலின் ‘பழியுளார்’ என்றார்.