4114. புற்றர வணிந்து நீறுமெய் பூசிப்
       பூதங்கள் சூழ்தர வூரூர்
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும்
     பிரானவ னுறைவிடம் வினவில்
கற்றநால் வேத மங்கமோ ராறுங்
     கருத்தினா ரருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழா ரோமமாம் புலியூ
     ருடையவர் வடதளி யதுவே.            4

     4. பொ-ரை: சிவபெருமான் புற்றில் வசிக்கும் இயல்புடைய
பாம்பை அணிந்தவர். திருநீற்றினைத் தன்மேனி முழுவதும் பூசியவர்.
பூதகணங்கள் சூழ்ந்து வர, இடபத்தின் மேலேறி ஊரூராகச் சென்று
பிச்சையேற்பவர். அப்பெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம்,
தாங்கள் கற்ற நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் இவற்றின்
கருத்தை உணர்ந்தவர்களாய், அன்பும், புகழுமுடைய அந்தணர்கள்
வாழும் திருஓமமாம்புலியூர் உடையவர் வடதளியே.

     கு-ரை: பெய்பலி கொள்ளும்பிரான்:-என்றது “குடிப்பது கூழ்
கொப்பளிப்பது பன்னீர்” என்பது போலும் ஓர் நயம்.