4122. கடிதென வந்த கரிதனை யுரித்து
       அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
     பிறைநுத லவளொடு முடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து
     கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங்
     கோணமா மலையமர்ந் தாரே.           2

     2. பொ-ரை: விரைவாகப் பாய்ந்து வந்த யானையின் தோலை
உரித்துத் திருமேனிமேல் போர்த்திக் கொண்டவர் சிவபெருமான்.
அவர் பெண் யானை போன்ற நடையை உடையவளாய்,
வளையல்களை அணிந்தவளாய்ப் பிறை போன்ற நெற்றியையுடைய
உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். பிறர் கொடிது என்று
அஞ்சத்தக்க அலைகளையுடைய ஒலிக்கின்ற கடல், முத்துக்களைச்
சுமந்து மக்களுக்கு வழங்கும் வளமைமிக்க திருக்கோண மாமலையில்
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: கொடிது என - (கோட்டோர்) கொடிது என்று
கூறும் படியாக.