4141. ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
  ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை கூறுகந் தீரே.               5

     5. பொ-ரை: இறைவனே! நீவிர் இடபத்தை விரும்பி
வாகனமாகக் கொண்டுள்ளீர். நெருப்பேந்திச் சுடுகாட்டில்
ஆடுகின்றீர். திருவெண்ணீற்றினை விரும்பிப் பூசியுள்ளீர். வரிசையாக
அழகுடன் விளங்கும் தேன் துளித்து நறுமணம் கமழும் கொன்றை
மாலையை அணிந்துள்ளீர். செல்வம் பெருகும் திருநல்லூர் என்னும்
திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி
வீற்றிருந்தருளும் நீர் உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு
உகந்துள்ளீர்.

     கு-ரை: இறைவன் செயல்: ஏறு - இடபத்தை. உகந்தீர் -
விரும்பி ஏறினீர். நிறை - வரிசையாக. ஆர் - பொருந்திய. விரி -
மலர்ந்த. தேன் - தேனைஉடைய. கொன்றை - கொன்றை மலரின்.
நாறு - மணம் வீசுதலை. உகந்தீர் - விரும்பினீர். நாறு - நாறுதல்
(நல்லூர்ப் பெருமணத்து) வேறுகந்தீர் - வேறாக விரும்பினீர்!