|
| பாடல் எண் :1540 | இமையா முக்கண ரென்நெஞ்சத் துள்ளவர் தமையா ரும்மறி வொண்ணாத் தகைமையர் இமையோ ரேத்த இருந்தவ னேகம்பன் நமையா ளும்மவ னைத்தொழு மின்களே. |
| | 4 | பொ-ரை; இமையாத முக்கண்ணை உடையவரும், என் நெஞ்சத்தின் கண் உள்ளவரும், தம்மை யாரும் அறியவொண்ணாத பெருந்தகைமை உள்ளவரும். தேவர்கள் ஏத்துமாறு வீற்றிருந்தவரும, நம்மையாள்பவருமாகிய திருவேகம்பரைத் தொழுவீர்களாக. கு-ரை; இமையா-இமைக்காத. முக்கணர்-மூன்றுகண்களை உடையவர். இமைத்தால் கண்பொத்தி பார்வதி விளையாடியபோது ஏற்பட்ட இருண்ட நிலை உலகிற்கு உண்டாமோ என்னும் கருணையால் இமையாதிருக்கும் முக்கணர் என்க. தம்மையாரும் உள்ளவாறறிய முடியாத தம்மையர் என்க. ஆளும் - நம்மை ஆட்கொள்ளுவான். |
|