|
| பாடல் எண் :1759 | இலங்கை மன்ன னிருபது தோளிற மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர் நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும் வலங்கொள் வார்வினை யாயின மாயுமே. |
| | 10 | பொ-ரை: இலங்கை மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் இற்று மனஞ் சுழலும்படியாகத் திருக்கயிலாயப் பெருவரையின் மேல் திருவிரல் ஊன்றியவரும், நன்மை மிகுந்த திருநீற்றருமாகிய நள்ளாறரை நாள்தோறும் வலம் வந்து வணங்குவார் வினைகள் மாயும். கு-ரை: இற - நொறுங்க. மலங்க - கலங்க. மால்வரை - பெரிய கயிலைமலை. மாயும் - அழியும். |
|