|
பாடல் எண் :1928 | துள்ளு மான்மறி தூமழு வாளினர் வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர் அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம் வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ் வாவதே. |
| 5 | பொ-ரை: துள்ளும் மான்குட்டியையும், தூய மழு வாளினையும் உடையவரும், சடைமேற் கங்கையை மறைத்தவரும் ஆகிய சேறு நிறைந்த வயல் சூழ்ந்த மணஞ்சேரியில் உறையும் வள்ளலார் கழல்களை வாழ்த்தலே வாழ்வாவது. கு-ரை: துள்ளும் - துள்ளிச்செல்லும். மான்மறி - மான்குட்டி. தூமழுவாள் - தூயமழுவாகிய வாள். வெள்ளநீர் - வெள்ளமாக வந்த கங்கை நீரை. கரந்தார்- மறைத்துவைத்தார். சடைமேல் அவர் எனப் பிரிக்க. அள்ளல்ஆர் - சேறு பொருந்திய. வாழ்த்தலே வாழ்வு ஆவது என்க. |
|