5.9 திருமறைக்காடு
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1154

ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம்
மாதரார் வலம்கொள் மறைக்காடரைக்
காதல்செய்து, கருதப்படுமவர்
பாதம் ஏத்த, பறையும், நம் பாவமே.

1
உரை
பாடல் எண் :1155

பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கம் தான் உடை மா மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்!-அடியார் தம்மை
நோக்கிக் காண்பது, நும் பணி செய்யிலே.

2
உரை
பாடல் எண் :1156

புன்னை ஞாழல் புறணி அருகுஎலாம்,
மன்னினார் வலம் கொள் மறைக்காடரோ!
அன்ன மென் நடையாளை ஓர்பாகமாச்
சின்னவேடம் உகப்பது செல்வமே.

3
உரை
பாடல் எண் :1157

அட்டமாமலர் சூடி, அடும்பொடு,
வட்டப்புன்சடை மா மறைக்காடரோ!
நட்டம் ஆடியும், நால்மறை பாடியும்,!
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே.

4
உரை
பாடல் எண் :1158

நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும்,
மெய்யினார் வலம்கொள், மறைக்காடரோ!
தையல் பாகம் கொண்டீர்!-கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்பு உடன் வைப்பதே?

5
உரை
பாடல் எண் :1159

துஞ்சும் போதும் துயில் இன்றி ஏத்துவார்
வஞ்சு இன்றி(வ்) வலம்கொள் மறைக்காடரோ!
பஞ்சின் மெல் அடிப் பாவை பலி கொணர்ந்து
அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே.

6
உரை
பாடல் எண் :1160

திருவினார் செல்வம் மல்கு விழா அணி,
மருவினார் வலம்கொள், மறைக்காடரோ!
உருவினாள் உமைமங்கை ஓர்பாகம் ஆய்,
மருவினாய், கங்கையைச் சென்னி தன்னிலே.

7
உரை
பாடல் எண் :1161

சங்கு வந்து அலைக்கும் தடங்கானல்வாய்
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ!
கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே
அங்கையில்(ல்) அனல் ஏந்தல் அழகிதே?

8
உரை
பாடல் எண் :1162

குறைக் காட்டான், விட்ட தேர் குத்த மாமலை
இறைக் காட்டீ எடுத்தான், தலை ஈர்-ஐந்தும்
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்;
இறைக் காட்டாய்,-எம்பிரான்!-உனை ஏத்தவே!

9
உரை
5.10 திருமறைக்காடு
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1163

பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

1
உரை
பாடல் எண் :1164

ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ!
மூண்ட கார்முகிலின் முறிக்கண்டரோ!
ஆண்டுகொண்ட நீரே அருள் செய்திடும்!
நீண்ட மாக் கதவின் வலி நீக்குமே!

2
உரை
பாடல் எண் :1165

அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ!
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ!
பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ!
சட்ட இக் கதவம் திறப்பிம்மினே!

3
உரை
பாடல் எண் :1166

அரிய நால்மறை ஓதிய நாவரோ!
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ!
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ!
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே!

4
உரை
பாடல் எண் :1167

மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ!
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ!
விலை இல் மா மணிவண்ண உருவரோ!-
தொலைவு இலாக் கதவம் துணை நீக்குமே!

5
உரை
பாடல் எண் :1168

பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்! அடிகேள்!-உமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே!

6
உரை
பாடல் எண் :1169

வெந்தவெண்பொடிப் பூசும் விகிர்தரோ!
அந்தம் இ(ல்)லி, அணி மறைக்காடரோ!
எந்தை!-நீ அடியார் வந்து இறைஞ்சிட
இந்த மாக் கதவம் பிணை நீக்குமே!

7
உரை
பாடல் எண் :1170

ஆறு சூடும் அணி மறைக்காடரோ!
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ!
ஏறு அது ஏறிய எம்பெருமான்!-இந்த
மாறு இலாக் கதவம் வலி நீக்குமே!

8
உரை
பாடல் எண் :1171

சுண்ணவெண்பொடிப் பூசும் சுவண்டரோ!
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ!
அண்ணல், ஆதி, அணி மறைக்காடரோ!
திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே!

9
உரை
பாடல் எண் :1172

விண் உளார் விரும்பி(ய்) எதிர் கொள்ளவே
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

10
உரை
பாடல் எண் :1173

அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்று இலீர்; எம்பெருமானிரே!
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ!
சரக்க இக் கதவம் திறப்பிம்மினே!

11
உரை