சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம் முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர் அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.
மூல வண்ணத்தராய், முதல் ஆகிய கோல வண்ணத்தர் ஆகி, கொழுஞ் சுடர் நீலவண்ணத்தர் ஆகி, நெடும் பளிங்கு ஆல வண்ணத்தர் ஆவர்-ஐயாறரே.
சிந்தை வண்ணமும், தீயது ஓர் வண்ணமும், அந்திப் போது அழகு ஆகிய வண்ணமும், பந்திக் காலனைப் பாய்ந்தது ஓர் வண்ணமும், அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.
இருளின் வண்ணமும், ஏழ் இசை வண்ணமும், சுருளின் வண்ணமும், சோதியின் வண்ணமும், மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும், அருளும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல் குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும், மழைக்கண் மா முகில் ஆகிய வண்ணமும், அழைக்கும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
இண்டை வண்ணமும், ஏழ் இசை வண்ணமும், தொண்டர் வண்ணமும், சோதியின் வண்ணமும், கண்ட வண்ணங்கள் ஆய்க் கனல் மா மணி அண்ட வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
விரும்பும் வண்ணமும், வேதத்தின் வண்ணமும், கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும், விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும், அரும்பின் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
ஊழி வண்ணமும், ஒண்சுடர் வண்ணமும், வேழ் ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும், வாழித் தீ உரு ஆகிய வண்ணமும், ஆழி வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
செய் தவன் திருநீறு அணி வண்ணமும், எய்த நோக்க(அ)அரிது ஆகிய வண்ணமும், கைது காட்சி அரியது ஓர் வண்ணமும், ஐது வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும், இடர்(க்)கள் போல் பெரிது ஆகிய வண்ணமும், கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும், அடுத்த வண்ணமும், ஆவர்-ஐயாறரே.