பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக் கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும், பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!
பரு வெண்கோட்டுப் பைங்கண் மதவேழத்தின் உருவம் காட்டி நின்றான், உமை அஞ்சவே; பெருவெண்காட்டு இறைவன்(ன்) உறையும்(ம்) இடம் திரு வெண்காடு அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!