கோணல் மா மதி சூடி, ஓர் கோவண நாண் இல் வாழ்க்கை நயந்தும், பயன் இலை; பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் காணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
பண்ணினை, பவளத்திரள் மா மணி அண்ணலை, அமரர்தொழும் ஆதியை, சுண்ணவெண் பொடியான், திரு வீரட்டம் நண்ணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
உற்றவர்தம் உறு நோய் களைபவர், பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர், சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் கற்கில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ, வில்-தான் கொண்டு எயில் எய்தவர்; வீரட்டம் கற்றால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
பல்லாரும் பலதேவர் பணிபவர், நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன், வில்லால் மூஎயில் எய்தவன், வீரட்டம் கல்லேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?
வண்டு ஆர் கொன்றையும் மத்தம்,-வளர்சடைக் கொண்டான்,-கோல மதியோடு அரவமும்; விண்டார் மும்மதில் எய்தவன்; வீரட்டம் கண்டால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
அரை ஆர் கோவண ஆடையன், ஆறு எலாம் திரை ஆர் ஒண் புனல் பாய் கெடிலக் கரை- விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்பால் கரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?.
நீறு உடைத் தடந்தோள் உடை நின்மலன், ஆறு உடைப் புனல் பாய் கெடிலக் கரை ஏறு உடைக் கொடியான்,-திரு வீரட்டம் கூறில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
செங்கண் மால்விடை ஏறிய செல்வனார், பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர், அம் கண் ஞாலம் அது ஆகிய, வீரட்டம், கங்குல் ஆக, என் கண் துயில் கொள்ளுமே?
பூண், நாண், ஆரம், பொருந்த உடையவர்; நாண் ஆக(வ்) வரைவில்லிடை அம்பினால், பேணார் மும்மதில் எய்தவன்; வீரட்டம் காணேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?
வரை ஆர்ந்த(வ்) வயிரத்திரள் மாணிக்கம் திரை ஆர்ந்த(ப்) புனல் பாய் கெடிலக் கரை விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம் உரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?
உலந்தார் வெண்தலை உண்கலன் ஆகவே, வலம்தான் மிக்க அவ் வாள் அரக்கன்தனைச் சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம் புலம்பேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?
எட்டு நாள்மலர் கொண்டு, அவன் சேவடி மட்டு அலர், இடுவார் வினை மாயுமால்- கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ- ரட்டனார் அடி சேருமவருக்கே.
நீளமா நினைந்து, எண் மலர் இட்டவர் கோள வல்வினையும் குறைவிப்பரால்- வாளமா இழியும் கெடிலக் கரை, வேளி சூழ்ந்து, அழகு ஆய வீரட்டரே.
கள்ளின் நாள்மலர் ஓர் இரு-நான்கு கொண்டு, உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார்- தெள்ளு நீர் வயல் பாய் கெடிலக் கரை, வெள்ளை நீறு அணி மேனி, வீரட்டரே.
பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்- வீங்கு தண்புனல் பாய் கெடிலக் கரை, வேங்கைத்தோல் உடை ஆடை, வீரட்டரே.
தேனப் போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன் தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்- மீனத் தண் புனல் பாய் கெடிலக் கரை, வேனல் ஆனை உரித்த, வீரட்டரே.
ஏழித் தொல் மலர் கொண்டு பணிந்தவர் ஊழித் தொல்வினை ஓட, அகற்றுவார்- பாழித் தண்புனல் பாய் கெடிலக் கரை, வேழத்தின்(ன்)உரி போர்த்த, வீரட்டரே.
உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டு இட, திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்- வரைகள் வந்து இழியும் கெடிலக் கரை, விரைகள் சூழ்ந்து அழகுஆய, வீரட்டரே.
ஓலி வண்டு அறை ஒண்மலர் எட்டினால் காலை ஏத்த வினையைக் கழிப்பரால்- ஆலி வந்து இழியும் கெடிலக் கரை, வேலி சூழ்ந்து அழகு ஆய, வீரட்டரே.
தாரித்து உள்ளி, தட மலர் எட்டினால் பாரித்து ஏத்த, வல்லார் வினை பாற்றுவார்- மூரித் தெண்திரை பாய் கெடிலக் கரை, வேரிச் செஞ்சடை வேய்ந்த, வீரட்டரே.
அட்டபுட்பம் அவை கொளும் ஆறு கொண்டு, அட்டமூர்த்தி அநாதிதன் பால் அணைந்து, அட்டும் ஆறு செய்கிற்ப-அதிகை வீ- ரட்டனார் அடி சேருமவர்களே.