மைக் கொள் கண் உமை பங்கினன், மான் மழுத் தொக்க கையினன், செய்யது ஓர் சோதியன், கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி நக்கனை, தொழ நம்வினை நாசமே.
முத்தினை, முதல் ஆகிய மூர்த்தியை, வித்தினை, விளைவு ஆய விகிர்தனை, கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி அத்தனை, தொழ நீங்கும், நம் அல்லலே.
வெண்திரைப் பரவை விடம் உண்டது ஓர் கண்டனை, கலந்தார் தமக்கு அன்பனை, கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய அண்டனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.
பலவும் வல்வினை பாறும் பரிசினால்- உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை குலவினான், குளிரும் பொழில் கோளிலி நிலவினான்தனை,-நித்தல் நினைமினே!
அல்லல் ஆயின தீரும்; அழகிய முல்லை வெண்முறுவல்(ல்) உமை அஞ்சவே, கொல்லை யானை உரித்தவன், கோளிலிச் செல்வன், சேவடி சென்று தொழுமினே!
ஆவின் பால் கண்டு அளவு இல் அருந்தவப் பாலன் வேண்டலும், ழுசெல்!ழு என்று பாற்கடல் கூவினான், குளிரும் பொழில் கோளிலி மேவினானை, தொழ வினை வீடுமே.
சீர்த்த நல் மனையாளும் சிறுவரும் ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால், கூத்தனார் உறையும் திருக்கோளிலி ஏத்தி, நீர், தொழுமின்(ன்)! இடர் தீருமே.
மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்! காலம் வந்து கடை முடியாமுனம் கோல வார் பொழில், கோளிலி மேவிய நீலகண்டனை நின்று நினைமினே!
கேடு மூடிக் கிடந்து உண்ணும் நாடு அது தேடி, நீர், திரியாதே சிவகதி கூடல் ஆம்; திருக்கோளிலி ஈசனைப் பாடுமின்(ன்), இரவோடு பகலுமே!
மடுத்து மாமலை ஏந்தல் உற்றான்தனை அடர்த்து, பின்னும் இரங்கி, அவற்கு அருள் கொடுத்தவன்(ன்) உறை கோளிலியே தொழ, விடுத்து நீங்கிடும், மேலைவினைகளே.
முன்னமே நினையா தொழிந்தேன், உனை; இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன், செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி மன்னனே, அடியேனை மறவலே!
விண் உளார் தொழுது ஏத்தும் விளக்கினை, மண் உளார் வினை தீர்க்கும் மருந்தினை,- பண் உளார் பயிலும் திருக்கோளிலி அண்ணலார்-அடியே தொழுது உய்ம்மினே!
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்; ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு-எட்டும்; ஏழைமைப்பட்டு இருந்து, நீர், நையாதே, கோளிலி(ய்) அரன் பாதமே கூறுமே!
விழவின் ஓசை ஒலி அறாத் தண்பொழில், பழகினார் வினை தீர்க்கும், பழம் பதி- அழல் கையான் அமரும்-திருக்கோளிலிக் குழகனார் திருப்பாதமே கூறுமே!
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை, காலன் ஆகிய காலற்கும் காலனை,- கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலிச் சூலபாணிதன் பாதம் தொழுமினே!
காற்றனை, கடல்நஞ்சு அமுது உண்ட வெண்- நீற்றனை, நிமிர்புன்சடை அண்ணலை, ஆற்றனை,-அமரும் திருக்கோளிலி ஏற்றனார் - அடியே தொழுது ஏத்துமே!
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை, ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை,- கோதி வண்டு அறையும் திருக்கோளிலி வேத நாயகன் பாதம் விரும்புமே!
நீதியால் - தொழுவார்கள் தலைவனை, வாதை ஆன விடுக்கும் மணியினை,- கோதி வண்டு அறையும் திருக்கோளிலி வேதநாயகன் பாதம் விரும்புமே!
மாலும் நான்முகனாலும் அறிவு ஒணாப் பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை, கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலி நீலகண்டனை, நித்தல் நினைமினே!
அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை நெருக்கி அம் முடிபத்து இறுத்தான், அவற்கு இரக்கம் ஆகியவன், திருக்கோளிலி அருத்தி ஆய் அடியே தொழுது உய்ம்மினே!