கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால் மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே, சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக் கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!
சுற்றமும், துணை நல் மடவாளொடு, பெற்ற மக்களும், பேணல் ஒழிந்தனர்; குற்றம் இல் புகழ்க் கொண்டீச்சுரவனார் பற்று அலால், ஒரு பற்று மற்று இல்லையே.
மாடு தான் அது இல் எனின், மானுடர் பாடுதான் செல்வார் இல்லை; பல்மாலையால் கூட நீர் சென்று, கொண்டீச்சுரவனைப் பாடுமின்! பரலோகத்து இருத்துமே.
தந்தை, தாயொடு, தாரம், எனும் தளை- பந்தம் ஆங்கு அறுத்து, பயில்வு எய்திய கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனைச் சிந்தை செய்ம்மின்கள், சேவடி சேரவே!
கேளுமின்(ன்): இளமை அது கேடு வந்து ஈளையோடு இருமல்(ல்) அது எய்தல் முன், கோள் அரா அணி கொண்டீச்சுரவனை நாளும் ஏத்தித் தொழுமின்! நன்கு ஆகுமே.
வெம்பு நோயும் இடரும் வெறுமையும் துன்பமும் துயரும்(ம்) எனும் சூழ்வினை, கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை, ழுஎம்பிரான்!ழு என வல்லவர்க்கு இல்லையே.
அல்லலோடு அருநோயில் அழுந்தி, நீர், செல்லுமா நினையாதே, கனை குரல் கொல்லை ஏறு உடைக் கொண்டீச்சுரவனை வல்ல ஆறு தொழ, வினை மாயுமே.
நாறு சாந்து அணி நல்முலை, மென்மொழி, மாறு இலா மலைமங்கை ஓர்பாகமாக் கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து ஊறுவார் தமக்கு ஊனம் ஒன்று இல்லையே.
அயில் ஆர் அம்பு எரி, மேரு வில், ஆகவே எயிலாரும் பொடி ஆய் விழ எய்தவன், குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனைப் பயில்வாரும் பெருமை பெறும் பாலரே.
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான், குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத் தலையினால் வணங்க, தவம் ஆகுமே.