புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்; நக்கு அணைந்து நறுமலர் கொய்திலர்; சொக்கு அணைந்த சுடர் ஒளிவண்ணனை மிக்குக் காணல் உற்றார்-அங்கு இருவரே.
அலரும் நீரும் கொண்டு ஆட்டித் தெளிந்திலர்; திலகம் மண்டலம் தீட்டித் திரிந்திலர்; உலகமூர்த்தி, ஒளிநிற-வண்ணனைச் செலவு காணல் உற்றார்-அங்கு இருவரே.
ஆப்பி நீரோடு அலகு கைக் கொண்டிலர்; பூப் பெய் கூடை புனைந்து சுமந்திலர்; காப்புக் கொள்ளி, கபாலிதன் வேடத்தை ஓப்பிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்; பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்; ஐயன், வெய்ய அழல் நிற-வண்ணனை மெய்யைக் காணல் உற்றார்-அங்கு இருவரே.
எருக்கு அம் கண்ணிகொண்டு இண்டை புனைந்திலர்; பெருக்கக் கோவணம் பீறி உடுத்திலர்; தருக்கினால் சென்று, தாழ்சடை அண்ணலை நெருக்கி, காணல் உற்றார்-அங்கு இருவரே.
மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர்; நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர்; உரம் பொருந்தி, ஒளிநிற-வண்ணனை நிரம்பக் காணல் உற்றார்-அங்கு இருவரே.
கட்டுவாங்கம் கபாலம் கைக் கொண்டிலர்; அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர்; சிட்டன் சேவடி சென்று எய்திக் காணிய, பட்ட கட்டம் உற்றார்-அங்கு இருவரே.
வெந்த நீறு விளங்க அணிந்திலர்; கந்தமாமலர் இண்டை புனைந்திலர்; எந்தை, ஏறு உகந்து ஏறு எரிவண்ணனை, அந்தம் காணல் உற்றார்-அங்கு இருவரே.
இள எழுந்த இருங்குவளை(ம்) மலர் பிளவு செய்து, பிணைத்து அடி இட்டிலர்; களவு செய் தொழில் காமனைக் காய்ந்தவன் அளவு காணல் உற்றார்-அங்கு இருவரே.
கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்; விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்; அண்டமூர்த்தி, அழல்நிற-வண்ணனைக் கெண்டிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.
செங்கணானும் பிரமனும் தம்முளே எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்; ழுஇங்கு உற்றேன்!ழு என்று இலிங்கத்தே தோன்றினான், பொங்கு செஞ்சடைப் புண்ணியமூர்த்தியே.