531சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால்
                           பிளப்பித்த சதுரர் போலும்;
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும்; நாரணனை
                   இடப்பாகத்து அடைத்தார் போலும்;
குமரனையும் மகன் ஆக உடையார் போலும்; குளிர்
                   வீழிமிழலை அமர் குழகர் போலும்;
அமரர்கள் பின் அமுது உண, நஞ்சு உண்டார் போலும்
             அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.