7.13 திருத்துறையூர்
தக்கராகம்
1மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி,
குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும், துறையூர்த்
தலைவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே .
உரை
   
2மத்தம் மதயானையின் வெண் மருப்பு உந்தி,
முத்தம் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
பத்தர் பயின்று ஏத்திப் பரவும், துறையூர்
அத்தா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
உரை
   
3கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்திச்
செந்தண் புனல் வந்து இழி பெண்ணை வடபால்,
மந்தி பல மா நடம் ஆடும், துறையூர்
எந்தாய்! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
உரை
   
4அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி,
சுரும்பு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
கரும்பு ஆர் மொழிக் கன்னியர் ஆடும், துறையூர்
விரும்பா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
உரை
   
5பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி,
நாடு ஆர வந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும், துறையூர்
வேடா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
உரை
   
6மட்டு ஆர் மலர்க் கொன்றையும் வன்னியும் சாடி,
மொட்டு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா, துறையூர்ச்
சிட்டா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
உரை
   
7மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி,
தாது ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும், துறையூர்
நாதா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
உரை
   
8கொய்யா மலர்க் கோங்கொடு வேங்கையும் சாடி,
செய் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும், துறையூர்
ஐயா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
உரை
   
9விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய,
மண் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
பண் ஆர் மொழிப் பாவையர் ஆடும், துறையூர்
அண்ணா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
உரை
   
10மா வாய் பிளந்தானும், மலர் மிசையானும்,
ஆவா! அவர் தேடித் திரிந்து அலமந்தார்;
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்
தேவா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
உரை
   
11செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன்,
கையால்-தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல்
பொய்யாத் தமிழ் ஊரன், உரைத்தன வல்லார்,
மெய்யே பெறுவார்கள், தவநெறிதானே .
உரை