தொடக்கம் |
|
|
7.14 திருப்பாச்சிலாச்சிராமம் தக்கராகம் |
1 | வைத்தனன் தனக்கே, தலையும் என் நாவும் நெஞ்சமும்; வஞ்சம் ஒன்று இன்றி உய்த்தனன் தனக்கே, திருவடிக்கு அடிமை; உரைத்தக்கால், உவமனே ஒக்கும்; பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் பித்தரே ஒத்து ஓர் நச்சிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|
|
2 | “அன்னையே!” என்னேன்; “அத்தனே!” என்னேன்; “அடிகளே அமையும்” என்று இருந்தேன்; என்னையும், “ஒருவன் உளன்” என்று கருதி, இறை இறை திரு அருள் காட்டார்; அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள் பின்னையே அடியார்க்கு அருள் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|
|
3 | உற்றபோது அல்லால் உறுதியை உணரேன்; “உள்ளமே அமையும்” என்று இருந்தேன்; செற்றவர் புரம் மூன்று எரி எழச் செற்ற, செஞ்சடை, நஞ்சு அடை கண்டர், அற்றவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், பெற்ற போது உகந்து, பெறாவிடில் இகழில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|
|
4 | நாச் சில பேசி, “நமர் பிறர்” என்று, “நன்று தீது” என்கிலர்; மற்று ஓர் பூச்சு இலை; நெஞ்சே! பொன் விளை கழனிப் புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கைப் பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர் தாம் பலரையும் ஆட்கொள்வர்; பரிந்து ஓர் பேச்சு இலர்; ஒன்றைத் தர இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|
|
5 | வரிந்த வெஞ்சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும், “புரிந்த அந் நாளே புகழ் தக்க; அடிமை போகும் நாள் வீழும் நாள்” ஆகிப் பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், பிரிந்து இறைப் போதில் பேர்வதே ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|
|
6 | செடித் தவம் செய்வார் சென்றுழிச் செல்லேன்; “தீவினை செற்றிடும்” என்று அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்; ஆவதும் அறிவர், எம் அடிகள்; படைத்தலைச் சூலம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், பிடித்த வெண்நீறே பூசுவது ஆனால், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|
|
7 | கையது கபாலம்; காடு உறை வாழ்க்கை; கட்டங்கம் ஏந்திய கையர்; மெய்யது புரிநூல்; மிளிரும் புன்சடை மேல் வெண்திங்கள் சூடிய விகிர்தர்; பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்; மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|
|
8 | நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன்; நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன்; கணம் படிந்து ஏத்தி, கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன்; பணம் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், பிணம் படு காட்டில் ஆடுவது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|
|
9 | குழைத்து வந்து ஓடிக் கூடுதி, நெஞ்சே! குற்றேவல் நாள்தொறும் செய்வான்; இழைத்த நாள் கடவார்; அன்பிலரேனும், “எம்பெருமான்!” என்று எப்போதும் அழைத்தவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|
|
10 | துணிப்படும் உடையும் சுண்ண வெண்நீறும் தோற்றமும் சிந்தித்துக் காணில், மணிப் படு கண்டனை வாயினால் கூறி, மனத்தினால்-தொண்டனேன் நினைவேன்; பணிப் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், பிணிப்பட ஆண்டு, பணிப்பு இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|
|
11 | ஒருமையே அல்லேன், எழுமையும் அடியேன்; அடியவர்க்கு அடியனும் ஆனேன்; உரிமையால் உரியேன்; உள்ளமும் உருகும்; ஒண் மலர்ச் சேவடி காட்டாய்; அருமை ஆம் புகழார்க்கு அருள் செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள், பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|
|
12 | ஏசின அல்ல; இகழ்ந்தன அல்ல; “எம்பெருமான்!” என்று எப்போதும் பாயின புகழான், பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழப் பல்-நாள் வாயினால் கூறி மனத்தினால் நினைவான், வள வயல் நாவல் ஆரூரன், பேசின பேச்சைப் பொறுக்கிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? . |
|
உரை
|
|
|
|