7.59 திருஆரூர்
தக்கேசி
1பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை,
பின்னை என் பிழையைப் பொறுப்பானை, பிழை எலாம் தவிரப் பணிப்பானை,
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை,
அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
உரை
   
2கட்டமும் பிணியும் களைவானை; காலற் சீறிய கால் உடையானை;
விட்ட வேட்கை வெந்நோய் களைவானை; விரவினால் விடுதற்கு அரியானை;
பட்ட வார்த்தை, பட நின்ற வார்த்தை, வாராமே தவிரப் பணிப்பானை;
அட்ட மூர்த்தியை; மட்டு அவிழ் சோலை ஆரூரானை; மறக்கலும் ஆமே? .
உரை
   
3கார்க்குன்ற(ம்) மழை ஆய்ப் பொழிவானை, கலைக்கு எலாம் பொருள் ஆய் உடன்கூடிப்
பார்க்கின்ற(வ்) உயிர்க்குப் பரிந்தானை, பகலும் கங்குலும் ஆகி நின்றானை,
ஓர்க்கின்ற(ச்) செவியை, சுவை தன்னை, உணரும் நாவினை, காண்கின்ற கண்ணை,
ஆர்க்கின்ற(க்) கடலை, மலை தன்னை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
உரை
   
4செத்த போதினில் முன் நின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்,
வைத்த சிந்தை உண்டே; மனம் உண்டே; மதி உண்டே; விதியின் பயன் உண்டே!
“முத்தன், எங்கள் பிரான்” என்று வானோர் தொழ நின்ற(த்) திமில் ஏறு உடையானை,
அத்தன், எந்தைபிரான், எம்பிரானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
உரை
   
5செறிவு உண்டேல், மனத்தால்-தெளிவு உண்டேல், தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல்,
மறிவு உண்டேல், மறுமைப் பிறப்பு உண்டேல், வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை                                                                                 உண்டேல்,
பொறிவண்டு யாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன் போலும் சடைமேல்                                                                                 புனைந்தானை
அறிவு உண்டே; உடலத்து உயிர் உண்டே; ஆரூரானை மறக்கலும் ஆமே? .
உரை
   
6பொள்ளல் இவ் உடலைப் பொருள் என்று, பொருளும் சுற்றமும் போகமும் ஆகி,
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை,
“வள்ளல்! எம்தமக்கே துணை!” என்று நாள் நாளும்(ம்) அமரர் தொழுது ஏத்தும்
அள்ளல் அம் கழனிப் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே? .
உரை
   
7கரி-யானை உரி கொண்ட கையானை, கண்ணின் மேல் ஒரு கண் உடையானை,
வரியானை, வருத்தம் களைவானை, மறையானை, குறை மாமதி சூடற்கு
உரியானை, உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை, உகந்து உள்கி நண்ணாதார்க்கு
அரியானை, அடியேற்கு எளியானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
உரை
   
8வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப் பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாள் நாளும் மலர் இட்டு வணங்கார்; நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்;
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன், கிளைக்கு எலாம் துணை ஆம் எனக் கருதி;
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன்; ஆரூரானை மறக்கலும் ஆமே? .
உரை
   
9விடக்கையே பெருக்கிப் பலநாளும் வேட்கையால் பட்ட வேதனை தன்னைக்
கடக்கிலேன்; நெறி காணவும் மாட்டேன்; கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும்
இடக்(க்)கிலேன்; பரவைத் திரைக் கங்கைச் சடையானை, உமையாளை ஓர் பாகத்து
அடக்கினானை, அம் தாமரைப் பொய்கை ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
உரை
   
10ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை, நச்சு அரவு ஆர்த்த
பட்டியை, பகலை, இருள் தன்னை, பாவிப்பார் மனத்து ஊறும் அத் தேனை,
கட்டியை, கரும்பின் தெளி தன்னை, காதலால் கடல் சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனை, பட்டனை, செல்வ ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
உரை
   
11ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருள் ஆய் உடன் கூடி,
கார் ஊரும் கமழ் கொன்றை நல்மாலை முடியன், காரிகை காரணம் ஆக
ஆரூரை(ம்) மறத்தற்கு அரியானை, அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன்-
ஆரூரன்(ன்) அடிநாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர் தாமே .
உரை