7.75 திருஆனைக்கா
காந்தாரம்
1மறைகள் ஆயின நான்கும், மற்று உள பொருள்களும், எல்லாத்-
துறையும், தோத்திரத்து இறையும், தொன்மையும், நன்மையும், ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை, நாளும்,
“இறைவன்” என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.
உரை
   
2வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ, வஞ்சகர்கள் கூடி,
தங்கள் மேல் அடராமை, “உண்!” என, உண்டு இருள் கண்டன்;
அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும்,
“எங்கள் ஈசன்” என்பார்கள் எம்மையும் ஆள் உடையாரே.
உரை
   
3நீல வண்டு அறை கொன்றை, நேர் இழை மங்கை, ஒர் திங்கள்,
சால வாள் அரவங்கள், தங்கிய செஞ்சடை எந்தை;
ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆள் உடையாரே.
உரை
   
4தந்தை தாய், உலகுக்கு; ஓர் தத்துவன்; மெய்த் தவத்தோர்க்கு;
பந்தம் ஆயின பெருமான்; பரிசு உடையவர் திரு அடிகள்;
அம் தண் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
“எந்தை” என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.
உரை
   
5கணை செந்தீ, அரவம் நாண், கல் வளையும் சிலை, ஆகத்
துணை செய் மும் மதில் மூன்றும் சுட்டவனே, உலகு உய்ய;
அணையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
இணை கொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.
உரை
   
6விண்ணின் மா மதி சூடி; விலை இலி கலன் அணி விமலன்;
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன்; பசு உகந்து ஏறி;
அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆள் உடையாரே.
உரை
   
7தாரம் ஆகிய பொன்னித் தண்துறையும் ஆடி விழுத்தும்
நீரில் நின்று, அடி போற்றி, “நின்மலா, கொள்!” என ஆங்கே
ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆள் உடையாரே.
உரை
   
8உரவம் உள்ளது ஒர் உழையின் உரி, புலி அதள், உடையானை;
விரை கொள் கொன்றையினானை, விரி சடை மேல், பிறையானை;
அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே.
உரை
   
9வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து;
கலங்கக் காலனைக் காலால், காமனைக் கண், சிவப்பானை;
அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.
உரை
   
10ஆழியாற்கு அருள் ஆனைக்கா உடை ஆதி பொன் அடியின்
நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார், போய்,
ஏழுமா பிறப்பு அற்று(வ்) எம்மையும் ஆள் உடையாரே.
உரை