7.99 திருநாகேச்சுரம்
பஞ்சமம்
1பிறை அணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ் கணிக்க
நிறை அணி நெஞ்சு அனுங்க(ந்), நீலமால்விடம் உண்டது என்னே?
குறை அணி குல்லை, முல்லை, அளைந்து(க்), குளிர் மாதவி மேல்
சிறை அணி வண்டுகள் சேர்-திரு நாகேச்சுரத்து அரனே!
உரை
   
2அருந்தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி, ஓர் ஆல் அதன் கீழ்
இருந்து, அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னைகொல் ஆம்!-
குருந்து அயலே குரவம்(ம்) அரவின்(ன்) எயிறு ஏற்று அரும்ப,
செருந்தி செம்பொன் மலரும்-திரு நாகேச்சுரத்து அரனே!
உரை
   
3பாலனது ஆர் உயிர்மேல் பரியாது கைத்து எழுந்த
காலனை வீடுவித்து, கருத்து ஆக்கியது என்னைகொல் ஆம்?-
கோல மலர்க்குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில்,
சேலொடு வாளைகள் பாய்-திரு நாகேச்சுரத்து அரனே!
உரை
   
4குன்ற-மலைக்கு மரீ-கொடி ஏர் இடையாள்-வெருவ,
வென்றி மதகரியின்(ன்) உரி போர்த்ததும் என்னைகொல் ஆம்?-
முன்றில் இளங் கமுகின் முது பாளை மது அளைந்து,
தென்றல் புகுந்து உலவும்-திரு நாகேச்சுரத்து அரனே!
உரை
   
5அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து, ஒரு நால்மறை நூல்
உரை பெருக(வ்) உரைத்து, அன்று உகந்து(வ்), அருள்செய்தது என்னே?-
வரை தரு மா மணியும், வரைச் சந்து, அகிலோடும், உந்தித்
திரை பொரு தண்பழன-திரு நாகேச்சுரத்து அரனே!
உரை
   
6தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின் நின்று எழுந்த
சிங்கமும் நீள் புலியும் செழு மால்கரியோடு அலறப்
பொங்கிய போர் புரிந்து(ப்), பிளந்து, ஈர் உரி போர்த்தது என்னே?-
செங்கயல் பாய் கழனி-திரு நாகேச்சுரத்து அரனே!
உரை
   
7நின்ற இம் மா தவத்தை ஒழிப்பான் சென்று, அணைந்து, மிகப்
பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?-
பங்கய மா மலர்மேல் மது உண்டு, வண் தேன் முரல,
செங்கயல் பாய் வயல் சூழ்-திரு நாகேச்சுரத்து அரனே!
உரை
   
8வரி அர நாண் அது(வ்) ஆக, மாமேரு வில் அது(வ்) ஆக,
அரியன முப்புரங்கள்(ள்) அவை ஆர் அழல் மூட்டல் என்னே?-
விரிதரு மல்லிகையும், மலர்ச் சண்பகமும்(ம்), அளைந்து
திரிதரு வண்டு பண்செய்-திரு நாகேச்சுரத்து அரனே!
உரை
   
9அங்கு இயல் யோகு தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிகப்
பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?-
பங்கய மா மலர்மேல் மது உண்டு, பண் வண்டு அறைய,
செங்கயல் நின்று உகளும்-திரு நாகேச்சுரத்து அரனே!
உரை
   
10குண்டரை, கூறை இன்றித் திரியும் சமண்சாக்கியப்பேய்-
மிண்டரை, கண்ட தன்மை விரவு ஆகியது என்னைகொலோ?
தொண்டு இரைத்து(வ்), வணங்கி, தொழில் பூண்டு, அடியார் பரவும்
தெண்திரைத் தண்வயல் சூழ் திரு நாகேச்சுரத்து அரனே!
உரை
   
11கொங்கு அணை வண்டு அரற்ற, குயிலும் மயிலும் பயிலும்
தெங்கு அணை பூம்பொழில் சூழ் திரு நாகேச்சுரத்து அரனை,
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன், சொன்ன
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே.
உரை