திருஅம்மானை
 
செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும், காண்பு அரிய
பொங்கு மலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி,
எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொண்டு,
தெங்கு திரள் சோலை, தென்னன் பெருந்துறையான்,
அம் கணன், அந்தணன் ஆய், அறைகூவி, வீடு அருளும்
அம் கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
பாரார், விசும்பு உள்ளார், பாதாளத்தார், புறத்தார்,
ஆராலும் காண்டற்கு அரியான்; எமக்கு எளிய
பேராளன்; தென்னன்; பெருந்துறையான்; பிச்சு ஏற்றி,
வாரா வழி அருளி, வந்து, என் உளம் புகுந்த
ஆரா அமுது ஆய், அலை கடல்வாய் மீன் விசிறும்
பேர் ஆசை வாரியனை பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
இந்திரனும், மால், அயனும், ஏனோரும், வானோரும்,
அந்தரமே நிற்க, சிவன் அவனி வந்தருளி,
எம் தரமும் ஆட்கொண்டு, தோள் கொண்ட நீற்றன் ஆய்;
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான்,
பந்தம் பறிய, பரி மேல்கொண்டான், தந்த
அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
வான் வந்த தேவர்களும், மால், அயனோடு, இந்திரனும்,
கான் நின்று வற்றியும், புற்று எழுந்தும், காண்பு அரிய
தான் வந்து, நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு,
ஊன் வந்து உரோமங்கள், உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து, அமுதின் தெளிவின் ஒளி வந்த,
வான் வந்த, வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை,
வல்லாளன், தென்னன், பெருந்துறையான், பிச்சு ஏற்றி,
கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை
வெள்ளத்து அழுத்தி, வினை கடிந்த வேதியனை,
தில்லை நகர் புக்கு, சிற்றம்பலம் மன்னும்
ஒல்லை விடையானை பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
கேட்டாயோ தோழி! கிறி செய்த ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடை சூழ், தென்னன் பெருந்துறையான்,
காட்டாதன எல்லாம் காட்டி, சிவம் காட்டி,
தாள் தாமரை காட்டி, தன் கருணைத் தேன் காட்டி,
நாட்டார் நகை செய்ய, நாம் மேலை வீடு எய்த,
ஆள் தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை,
சேயானை, சேவகனை, தென்னன் பெருந்துறையின்
மேயானை, வேதியனை, மாது இருக்கும் பாதியனை,
நாய் ஆன நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை,
தாயானை, தத்துவனை, தானே உலகு ஏழும்
ஆயானை, ஆள்வானை பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
துண்டப் பிறையான், மறையான், பெருந்துறையான்,
கொண்ட புரிநூலான், கோல மா ஊர்தியான்,
கண்டம் கரியான், செம் மேனியான், வெள் நீற்றான்,
அண்டம் முதல் ஆயினான், அந்தம் இலா ஆனந்தம்,
பண்டைப் பரிசே, பழ அடியார்க்கு ஈந்தருளும்;
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை,
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை,
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை,
பெண் ஆளும் பாகனை, பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல் காட்டி, நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானை பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
செப்பு ஆர் முலை பங்கன், தென்னன், பெருந்துறையான்,
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்,
அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன், ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
மைப்பொலியும் கண்ணி! கேள்; மால், அயனோடு, இந்திரனும்,
எப் பிறவியும் தேட, என்னையும் தன் இன் அருளால்
இப் பிறவி ஆட்கொண்டு, இனிப் பிறவாமே காத்து
மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அப்பொருள் ஆம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்!
உரை
   
கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட
மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச்
செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!
உரை
   
ஆனை ஆய்க் கீடம் ஆய் மானுடர் ஆய்த் தேவர் ஆய்
ஏனைப் பிற ஆய், பிறந்து, இறந்து எய்த்தேனை
ஊனையும் நின்று உருக்கி, என் வினையை ஓட்டு உகந்து,
தேனையும், பாலையும், கன்னலையும் ஒத்து, இனிய
கோன் அவன் போல் வந்து, என்னை, தன் தொழும்பில் கொண்டருளும்
வானவன் பூம் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
சந்திரனைத் தேய்த்தருளி, தக்கன் தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள் நெரித்திட்டு, எச்சன் தலை அரிந்து,
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து,
சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டு உகந்த,
செம் தார்ப் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
ஊன் ஆய், உயிர் ஆய், உணர்வு ஆய், என்னுள் கலந்து,
தேன் ஆய், அமுதமும் ஆய், தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்,
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!
உரை
   
சூடுவேன் பூம் கொன்றை; சூடிச் சிவன் திரள் தோள்
கூடுவேன்; கூடி, முயங்கி, மயங்கி நின்று,
ஊடுவேன்; செவ் வாய்க்கு உருகுவேன்; உள் உருகித்
தேடுவேன்; தேடி, சிவன் கழலே சிந்திப்பேன்;
வாடுவேன்; பேர்த்தும் மலர்வேன்; அனல் ஏந்தி
ஆடுவான் சேவடியே பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை,
வெளி வந்த மால், அயனும், காண்பு அரிய வித்தகனை,
தெளி வந்த தேறலை, சீர் ஆர் பெருந்துறையில்
எளிவந்து, இருந்து, இரங்கி, எண் அரிய இன் அருளால்
ஒளி வந்து, என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ,
அளி வந்த அந்தணனை பாடுதும் காண்; அம்மானாய்!
உரை
   
முன்னானை, மூவர்க்கும்; முற்றும் ஆய், முற்றுக்கும்
பின்னானை; பிஞ்ஞகனை; பேணு பெருந்துறையின்
மன்னானை; வானவனை; மாது இயலும் பாதியனை;
தென் ஆனைக்காவானை; தென் பாண்டி நாட்டானை;
`என்னானை, என் அப்பன்' என்பார்கட்கு இன் அமுதை
அன்னானை; அம்மானை பாடுதும் காண்: அம்மானாய்!
உரை
   
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான், பெருந்துறையான்,
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளி, தன் அடியார்
குற்றங்கள் நீக்கி, குணம் கொண்டு, கோதாட்டி,
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல் புகழே
பற்றி, இப் பாசத்தைப் பற்று அற நாம் பற்றுவான்,
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்!
உரை