திருக்கோத்தும்பி
 
பூ ஏறு கோனும், புரந்தரனும், பொற்பு அமைந்த
நா ஏறு செல்வியும், நாரணனும், நான்மறையும்,
மா ஏறு சோதியும், வானவரும், தாம் அறியாச்
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை `வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
`அத் தேவர் தேவர்; அவர் தேவர்;' என்று, இங்ஙன்,
பொய்த் தேவு பேசி, புலம்புகின்ற பூதலத்தே,
பத்து ஏதும் இல்லாது, என் பற்று அற, நான் பற்றிநின்ற
மெய்த் தேவர் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும்
பித்த உலகில், பிறப்போடு இறப்பு, என்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
சட்டோ நினைக்க, மனத்து அமுது ஆம் சங்கரனை,
கெட்டேன், மறப்பேனோ? கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்;
சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
ஒன்று ஆய், முளைத்து, எழுந்து, எத்தனையோ கவடு விட்டு,
நன்று ஆக வைத்து, என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த
என் தாதை; தாதைக்கும், எம் அனைக்கும், தம் பெருமான்!
குன்றாத செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே, தான் எனக்கு
மரணம், பிறப்பு, என்று, இவை இரண்டின் மயக்கு அறுத்த
கருணைக் கடலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
நோய் உற்று, மூத்து, நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து,
நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம்,
தாய் உற்று வந்து, என்னை ஆண்டுகொண்ட தன் கருணைத்
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
`வல் நெஞ்சக் கள்வன், மன வலியன்,' என்னாதே,
கல் நெஞ்சு உருக்கி, கருணையினால் ஆண்டுகொண்ட,
அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன்
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனை,
பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை,
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
நான் தனக்கு அன்பு இன்மை, நானும், தானும், அறிவோம்;
தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்;
ஆன கருணையும் அங்கு உற்றே தான்; அவனே
கோன் என்னைக் கூட குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
கரு ஆய், உலகினுக்கு அப்புறம் ஆய், இப் புறத்தே
மரு ஆர் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி,
அரு ஆய், மறை பயில் அந்தணன் ஆய், ஆண்டுகொண்ட
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
நானும், என் சிந்தையும், நாயகனுக்கு எவ் இடத்தோம்
தானும், தன் தையலும், தாழ் சடையோன் ஆண்டிலனேல்?
வானும், திசைகளும், மா கடலும், ஆய பிரான்
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும்,
கள்ளப்படாத களிவந்த வான் கருணை
வெள்ளப் பிரான், எம்பிரான், என்னை வேறே ஆட்
கொள் அப் பிரானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
பொய் ஆய செல்வத்தே புக்கு, அழுந்தி, நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை, ஆட்கொண்ட
ஐயா! என் ஆர் உயிரே! அம்பலவா! என்று, அவன் தன்
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
தோலும், துகிலும்; குழையும், சுருள் தோடும்;
பால் வெள்ளை நீறும், பசும் சாந்தும்; பைங் கிளியும்,
சூலமும்; தொக்க வளையும்; உடைத் தொன்மைக்
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
`கள்வன், கடியன், கலதி, இவன்' என்னாதே,
வள்ளல், வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே;
உள்ளத்து உறு துயர், ஒன்று ஒழியாவண்ணம், எல்லாம்
தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை
   
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று
ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க,
நாய் மேல் தவிசு இட்டு, நன்றாப் பொருட்படுத்த
தீ மேனியானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உரை