திருக்கழுக்குன்றப் பதிகம்
 
பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
உரை
   
பிட்டு நேர்பட, மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே!
சட்ட நேர்பட, வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்;
சிட்டனே! சிவலோகனே! சிறு நாயினும் கடை ஆய வெம்
கட்டனேனையும் ஆட்கொள்வான், வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
உரை
   
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி, மலம் கெடுத்த பெருந்துறை
விலங்கினேன்; வினைக்கேடனேன், இனி மேல் விளைவது அறிந்திலேன்;
இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும், வைப்பிடம் இன்றியே
கலங்கினேன்; கலங்காமலே, வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
உரை
   
பூண் ஒணாதது ஓர் அன்பு பூண்டு, பொருந்தி, நாள்தொறும் போற்றவும்,
நாண் ஒணாதது ஒர் நாணம் எய்தி, நடுக் கடலுள் அழுந்தி, நான்
பேண் ஒணாத பெருந்துறைப் பெரும் தோணி பற்றி உகைத்தலும்,
காண் ஒணாத் திருக்கோலம், நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
உரை
   
கோல மேனி வராகமே! குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே!
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி!
ஞாலமே கரி ஆக, நான் உனை நச்சி நச்சிட வந்திடும்
காலமே! உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
உரை
   
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே!
ஏதமே பல பேச, நீ எனை ஏதிலார் முனம், என் செய்தாய்?
சாதல் சாதல், பொல்லாமை அற்ற, தனிச் சரண் சரண் ஆம் என,
காதலால் உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
உரை
   
இயக்கிமார் அறுபத்து நால்வரை எண் குணம் செய்த ஈசனே!
மயக்கம் ஆயது ஓர் மும் மலப் பழ வல் வினைக்குள் அழுந்தவும்,
துயக்கு அறுத்து, எனை ஆண்டுகொண்டு, நின் தூ மலர்க் கழல் தந்து, எனைக்
கயக்க வைத்து, அடியார் முனே வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
உரை