2. கீர்த்தித் திரு அகவல்


பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்
கட்டமா சித்தி யருளிய அதுவும்;

பதப்பொருள் : பட்டமங்கையில் - திருப்பட்டமங்கை என்னும் திருப்பதியில், பாங்காய் இருந்து - சிறப்பாய் இருந்து, அங்கு - அவ்விடத்தில், அட்டமாசித்தி - அட்டமாசித்திகளை, அருளிய அதுவும் - அருளிய அவ்விதமும்.

விளக்கம் : அட்டமாசித்தி உபதேசித்தது :

திருக்கயிலையில் இறைவன், கார்த்திகைப் பெண்கள் அறுவர்க்கும் அட்டமாசித்திகளை உபதேசம் செய்தான். திருவருள் துணையின்மையால் அவர்கள் அவற்றை மறந்தார்கள். இறைவன் சினந்து அவர்களைப் பட்டமங்கையில் ஆலமரத்தின் கீழ்க் கல்லாய்க் கிடக்குமாறு சபித்தான். அச்சாபத்தை நீக்க இறைவனே ஆசிரியனாய் வந்து அவர்களுக்கு அருள் புரிந்தான்.

(திருவிளையாடற்புராணம் - அட்டமாசித்தி உபதேசித்த படலம்) அட்டமாசித்திகளாவன : அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. பட்டமங்கையென்னும் ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைப் பகுதியைச் சார்ந்தது.