முதல் தந்திரம்

15. கல்லாமை

1கல்லாதவரும் கருத்து அறி காட்சியை
வல்லார் எனில் அருள் கண்ணான் மதித்து உளோர்
கல்லாதார் உண்மை பற்றா நிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணு கிலாரே.
உரை
   
2வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார்
அல்லாதவர்கள் அறிவுபல என்பார்
எல்லா இடத்தும் உளன் எங்கள்தம் இறை
கல்லாதவர்கள் கலப்பு அறியாரே.
உரை
   
3நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலை என்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே.
உரை
   
4கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன்
கல்லேன் அரன் நெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின் உள்
கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே.
உரை
   
5நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி
வல்லார் அறத்தும் தத்துவத்து உளும் ஆயினோர்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத் துயர் போகம் செய்வாரே.
உரை
   
6விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்து நின்று
எண்ணி எழுதி இளைத்து விட்டாரே.
உரை
   
7கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் காண ஒண்ணாது
கணக்கு அறிந்தார்க்கு அன்றிக்கை கூடா காட்சி
கணக்கு அறிந்து உண்மையைக் கண்டு அண்ட நிற்கும்
கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே.
உரை
   
8கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்து அறியாரே.
உரை
   
9கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள்
மற்றும் பல திசை காணார் மதி இலோர்
கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே.
உரை
   
10ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற
சோதி நடத்தும் தொடர் அறியாரே.
உரை