இரண்டாம் தந்திரம்

8. அடிமுடி தேடல்

1பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்
பிரமன் மால் தங்கள் தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க
அரன் அடி தேடி அரற்று கின்றாரே.
உரை
   
2அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண்டு இலர் மீண்டும் பார் மிசைக் கூடி
அடிகண் டு இலேன் என்று அச்சுதன் சொல்ல
முடி கண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.
உரை
   
3ஆம் ஏழ் உலகு உற நின்ற எம் அண்ணலும்
தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும்
வான் ஏழ் உலகு உறும் மா மணி கண்டனை
யானே அறிந்தேன் அவன் ஆண்மை யாலே.
உரை
   
4ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம்
சேணாய் வான் ஓங்கித் திரு உருவாய் அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து
தாண் முழுது அண்டமும் ஆகி நின்றானே.
உரை
   
5நின்றான் நில முழுது அண்டத்துள் நீளியன்
அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேல் செல
நன்று ஆம் கழல் அடி நாட ஒண்ணாதே.
உரை
   
6சேவடி ஏத்தும் செறிவுடை வானவர்
மூவடி தா என்றானும் முனிவரும்
பாவடியாலே பதம் செய் பிரமனும்
தாவடி இட்டுத் தலைப் பெய்தும் மாறே.
உரை
   
7தானக் கமலத்து இருந்த சதுமுகன்
தானக் கரும் கடல் ஊழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற
தானப் பெரும் பொருள் தன்மையது ஆமே.
உரை
   
8ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர்
மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந் நெறி முன் கண்டு
ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும்
கோலிங்கு அமைஞ்சருள் கூடலும் ஆமே.
உரை
   
9வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள்
ஆள் கொடுத்து எம்போல் அரனை அறிகிலர்
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத்
தாள் கொடுத்தான் அடி சார கிலாரே.
உரை
   
10ஊழி வலம் செய்து அங்கு ஓரும் ஒருவற்கு
வாழி சது முகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தா என
ஊழிக் கதிரோன் ஒளியை வென்றானே.
உரை