மூன்றாம் தந்திரம்

8. தியானம்

1வரும் ஆதி ஈர் எட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன் போகம் ஏவல்
உரு ஆய சத்தி பரத் தியான முன்னும்
குருவார் சிவத் தியானம் யோகத்தின் கூறே.
உரை
   
2கண்நாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள்
பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே.
உரை
   
3ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்து ஆங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே.
உரை
   
4ஒரு பொழுது உன்னார் உடலோடு உயிரை
ஒரு பொழுது உன்னார் உயிருள் சிவனை
ஒரு பொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை
ஒரு பொழுது உன்னார் சந்திரப் பூவே.
உரை
   
5மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரி ஒக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.
உரை
   
6எண் ஆயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை
உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே.
உரை
   
7நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில்
வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை
தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே.
உரை
   
8நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு
உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கித்
துயர் அற நாடியே தூங்க வல்லார்க்குப்
பயன் இது காயம் பயம் இல்லை தானே.
உரை
   
9மணி கடல் யானை வார் குழல் மேகம்
அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே.
உரை
   
10கடலொடு மேகம் களிறொடும் ஓசை
அட எழும் வீணை அண்டர் அண்டத்துச்
சுடர் மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடம் அறி யோகிக்கு அல்லால் தெரியாதே.
உரை
   
11ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்து துயராய் நிற்கும்
ஓசை அதன் மணம் போல விடுவது ஓர்
ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே.
உரை
   
12நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே.
உரை
   
13உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கு இருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக் கொன்றை ஈசன் கழல் சேரலாமே.
உரை
   
14பள்ளி அறையில் பகலே இருள் இல்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது
வெள்ளி அறையில் விடிவு இல்லை தானே.
உரை
   
15கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித்
தண்டு உடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே.
உரை
   
16அவ் அவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு
அவ் அவர் மண்டலத்து அவ் அவர் தேவராம்
அவ் அவர் மண்டலம் அவ் அவர்க்கே வரில்
அவ் அவர் மண்டலம் மாயம் மற்றோர்க்கே.
உரை
   
17இளைக் கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே
முளைக் கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப் பெரும் பாசம் துருவிடும் ஆகில்
இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே.
உரை
   
18முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர் நிலை வானவர் கோனே.
உரை
   
19நடல் இத்த நாபிக்கு நால் விரல் மேலே
மடல் இத்த வாணிக்கு இருவிரல் உள்ளே
கடலித்து இருந்து கருத வல்லார்கள்
சடலத் தலைவனைத் தாம் அறிந்தாரே.
உரை
   
20அறிவாய சத்து என்னு மாறா அகன்று
செறிவான மாயை சிதைத்து அருளாலே
பிரியாத பேர் அருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலை அறிந்தாரே.
உரை