நான்காம் தந்திரம்

5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்

1மா மாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில்
தாம் ஆன மந்திரம் சத்தி தன் மூர்த்திகள்
ஆம் ஆய அலவாம் திரிபுரை ஆங்கே.
உரை
   
2திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
வரு பலவாய் நிற்கும் மாமாது தானே.
உரை
   
3தானா அமைந்த அம் முப்புரம் தன் இடைத்
தான் ஆன மூ உரு ஓர் உருத் தன்மையள்
தான் ஆன பொன் செம்மை வெண் நிறத்தாள் கல்வி
தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே.
உரை
   
4நல்கும் திரிபுரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார் அண்டம் ஆனவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப்போதம் தந்து ஆளும்.
உரை
   
5தாள் அணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வார் அணி கொங்கை மலர்க் கன்னல் வாளி வில்
ஏர் அணி அங்குச பாசம் எழில் முடி
கார் அணி மா மணிக் குண்டலக் காதிக்கே.
உரை
   
6குண்டலக் காதி கொலை வில் புருவத்தாள்
கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மா மதிச்
சண்டிகை நால் திசை தாங்கி நின்றாளே.
உரை
   
7நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றல் இல் மோகினி மா திருக் குஞ்சிகை
நன்று அறி கண்டிகை நால்கால் கரீடணி
துன்றிய நல் சுத்த தாமரைச் சுத்தையே.
உரை
   
8சுத்த அம் பாரத் தனத்தி சுகோதயள்
வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை
அத்தகை யாவும் அணோரணி தானும் ஆய்
வைத் தவக் கோலம் மதி அவள் ஆகுமே.
உரை
   
9அவளை அறியா அமரரும் இல்லை
அவள் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை
அவள் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.
உரை
   
10அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அரு உருவாம் அவள் என்பர்
அறிவார் கருமம் அவள் இச்சை என்பர்
அறிவார் பரனும் அவள் இடத்தானே.
உரை
   
11தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மா தேவி
ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர்க் காவலன்
வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே.
உரை
   
12பரா சத்தி மா சத்தி பல வகையாலும்
தரா சத்தியாய் நின்ற தன்மை உணராய்
உரா சத்தி ஊழிகள் தோறும் உடனே
புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே.
உரை
   
13போகம் செய் சத்தி புரி குழலா ளொடும்
பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும்
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள் தொறும்
பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே.
உரை
   
14கொம்பு அனையாளை குவிமுலை மங்கையை
வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம் பவளத் திருமேனிச் சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே.
உரை
   
15வைத்த பொருளும் மரு உயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பரா பரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலை அவள் ஆமே.
உரை
   
16தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம் செயும் தூய்நெறித் தோகை
கலை பல வென்றிடும் கன்னி என் உள்ளம்
நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே.
உரை
   
17நின்றவள் நேர் இழை நீள் கலை யோடு உற
என்றன் அகம் படிந்து ஏழ் உலகும் தொழ
மன்றது ஒன்றி மனோன் மணி மங்கலி
ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே.
உரை
   
18ஒத்து அடங்கும் கமலத்து இடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்து அடைகின்ற மனோன்மணி மங்கலி
சித்து அடைக்கும் வழி தேர்ந்து உணரார்களே.
உரை
   
19உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி
மணம் கமழ் பூங் குழலாள் மங்கையும் தானும்
புணர்ந்து உடனே நிற்கும் போதரும் காலைக்
கணிந்து எழுவார்க்குக் கதி அளிப்பாளே.
உரை
   
20அளி ஒத்த பெண் பிள்ளை ஆனந்த சுந்தரி
புளி உறு புன் பழம் போல் உள்ளே நோக்கித்
தெளி உறு வித்துச் சிவகதி காட்டி
ஒளி உற வைத்து என்னை உய்ய உண்டாளே.
உரை
   
21உண்டு இல்லை என்றது உருச் செய்து நின்றது
வண்டு இல்லை மன்றின் உள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டலம் மூன்று உற மன்னி நின்றாளே.
உரை
   
22நின்றாள் அவன் தன் உடலும் உயிருமாய்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே
நின்றாள் பரம் சுடர் ஏடு அம் கையாளே.
உரை
   
23ஏடு அம் கை நங்கை இறை எங்கள் முக் கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த் தோத்திரம் சொல்லுமே.
உரை
   
24தோத்திரம் செய்து தொழுது துணை அடி
வாய்த்திட ஏத்திவழிபடுமாறு இரும்பு
ஆர்த்திடும் அங்குச பாசம் பசும் கரும்பு
ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகும் ஆம் ஆதிக்கே.
உரை
   
25ஆதி விதமிகுத்து அண்ட அந்த மால் தங்கை
நீதி மலரின் மேல் நேர் இழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்கால் பயில்விரேல்
சோதி மிகுத்து முக்காலமும் தோன்றுமே.
உரை
   
26மேதாதி ஈர் எட்டும் ஆகிய மெல் இயல்
வேத ஆதி நூலின் விளங்கும் பரா பரை
ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்ல அருளாலே.
உரை
   
27அருள் பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
பொருள் பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருள் உற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருள் உற்ற சேவடி போற்றுவன் யானே.
உரை
   
28ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை உழுபடை ஏந்திய வெண் நகை
ஊனம் அற உணர்ந்தார் உளத்து ஓங்குமே.
உரை
   
29ஓம் காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத்து உள்ளே இனிது இருந்தாளே.
உரை
   
30தானே தலைவி என நின்ற தற்பரை
தானே உயிர் வித்துத் தந்த பதினாலும்
வானோர் தலமும் மனமும் நல் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.
உரை