நான்காம் தந்திரம்

7. பூரண சத்தி

1அளந்தேன் அகல் இடத்து அந்தமும் ஈறும்
அளந்தேன் அகல் இடத்து ஆதிப் பிரானை
அளந்தேன் அகல் இடத்து ஆணொடு பெண்ணும்
அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே.
உரை
   
2உணர்ந்து இலர் ஈசனை ஊழி செய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன் அருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகம் ஆமே.
உரை
   
3கும்பக் களிறு ஐந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி இனிது உறை தையலும்
அன்பில் கலவி உள் ஆய் ஒழிந்தாரே.
உரை
   
4இன்பக் கலவியில் இட்டு எழுகின்றது ஓர்
அன்பில் புக வல்லன் ஆம் எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயர் உறும் பாசத்துள்
என்பில் பராசத்தி என் அம்மை தானே.
உரை
   
5என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கு அற்று
உன் அம்மை ஊழித் தலைவனும் அங்கு உளன்
மன் அம்மை ஆகி மருவி உரை செய்யும்
பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே.
உரை
   
6தார் மேல் உறைகின்ற தண்மலர் நான் முகன்
பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள
பூ மேல் உறைகின்ற போது அகம் வந்தனள்
நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே.
உரை
   
7ஆணையம் ஆய் அருந்தாது உள் இருந்தவர்
மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கிப் பின்
பாழ்நயம் ஆய பரத்தை அறிந்தபின்
தாள்நயம் ஆய அனாதனன் தானே.
உரை
   
8தானே எழுந்த இத்தத்துவ நாயகி
வான் நேர் எழுந்து மதியை விளக்கினள்
தேன் நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடம் உடை மன்று அறியீரே.
உரை
   
9அறிவு ஆன மாயையும் ஐம்புலக் கூட்டத்து
அறிவு ஆன மங்கை அருள் அது சேரில்
பிறியா அறிவு அறிவார் உளம் பேணும்
நெறி ஆய சித்தம் நினைந்து இருந்தாளே.
உரை
   
10இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம் செய்யாமல் அருளுடன் தூங்கப்
பருவம் செய்யாத ஓர் பாலனும் ஆமே.
உரை
   
11பாலனும் ஆகும் பரா சத்தி தன்னொடு
மேல் அணுகா விந்து நாதங்கள் விட்டிட
மூலம் அது ஆம் எனும் முத்திக்கு நேர்படச்
சாலவும் ஆய் நின்ற தற் பரத்தாளே.
உரை
   
12நின்ற பரா சத்தி நீள் பரன் தன்னொடு
நின்று அறி ஞானமும் இச்சையும் ஆய் நிற்கும்
நன்று அறியும் கிரியா சத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிடும் தானே.
உரை
   
13மரு ஒத்த மங்கையும் தானும் உடனே
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார்
கரு ஒத்து நின்று கலங்கின போது
திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே.
உரை
   
14சிந்தையின் உள்ளே திரியும் சிவ சத்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தம் ஒடு ஆதி அதாம் வண்ணத் தாளே.
உரை
   
15ஆறி இருந்த அமுத பயோதரி
மாறி இருந்த வழி அறிவார் இல்லை
தேறி இருந்து நல்தீபத்து ஒளியுடன்
ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே.
உரை
   
16உடையவன் அங்கி உருத்திர சோதி
விடை அவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடை அது ஆகிய சாதகர் தாமே.
உரை
   
17தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது
பார் மேல் இதழ் பதின் எட்டின் இருநூறு உள
பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார் மேல் உறைகின்ற பைந் தொடியாளே.
உரை
   
18பைங்கொடியாளும் பரமன் இருந்திடத்
திண் கொடி ஆகத் திகழ் தரு சோதி ஆம்
விண் கொடி ஆகி விளங்கி வருதலால்
பெண் கொடி ஆக நடந்தது உலகே.
உரை
   
19நடந்தது அம் மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது தன் வழி பங்கயத்து உள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி அடுத்தே.
உரை
   
20அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகத்தே செல
முடுக்கும் தாமரை முச் சதுரத்தே.
உரை
   
21முச் சதுரத்தே எழுந்த முளைச் சுடர்
எச் சதுரத்தும் இடம் பெற ஓடிடக்
கைச் சதுரத்துக் கடந்து உள் ஒளிபெற
எச்சதுரத்தும் இருந்தனள் தானே.
உரை
   
22இருந்தனள் தன் முகம் ஆறு ஒடு நால் ஆய்
பரந்தன வாயு திசை திசை தோறும்
குவிந்தன முத்தின் முக ஒளி நோக்கி
நடந்தது தேறல் அதோ முகம் அம்பே.
உரை
   
23அம்பு அன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய
செம் பொன் செய் யாக்கை செறிகமழ் நாள்தொறும்
நம்பனை நோக்கி நவிலுகின்றாளே.
உரை
   
24நவிலும் பெரும் தெய்வம் நால் மறைச் சத்தி
துகில் உடை ஆடை நிலம் பொதி பாதம்
அகிலமும் அண்டம் முழுதும் செம்மாந்து
புகலும் முச்சோதி புனைய நிற்பாளே.
உரை
   
25புனைய வல்லாள் புவனத்து இறை எங்கள்
வனைய வல்லாள் அண்ட கோடிகள் உள்ளே
புனைய வல்லாள் மண்டலத்து ஒளி தன்னைப்
புனைய வல்லாளையும் போற்றி என்பேனே.
உரை
   
26போற்றி என்பேன் புவனா பதி அம்மை என்
ஆற்றல் உள் நிற்கும் அரும் தவப் பெண் பிள்ளை
சீற்றம் கடிந்த திரு நுதல் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கோள் பைந் தொடியே.
உரை
   
27தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை ஆம் மங்கை சங்கைச்
செடியார் வினை கெடச் சேர்வரை என்று என்று
அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே.
உரை
   
28மெல் இசைப் பாவை வியோமத்தின் மென் கொடி
பல் இசைப் பாவை பயன் தரு பைங் கொடி
புல் இசைப் பாவையைப் போகத்துரந்திட்டு
வல் இசைப் பாவை மனம் புகுந்தாளே.
உரை
   
29தாவித் தவப் பொருள் தானவன் எம் இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பரா சத்தி மேலொடு கீழ் தொடர்ந்து
ஆவிக்கும் அப் பொருள் தான் அது தானே.
உரை
   
30அது இது என்பார் அவனை அறியார்
கதி வர நின்றது ஓர் காரணம் காணார்
மது விரி பூங் குழல் மா மங்கை நங்கை
திதம் அது உன்னார்கள் தேர்ந்து அறியாரே.
உரை