நான்காம் தந்திரம்

8. ஆதார வாதேயம்

1நாலிதழ் ஆறில் விர்ந்தது தொண்ணூறு
தான் இதழ் ஆனவை நாற்பத்து நால் உள
பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய்த்
தான் இதழ் ஆகித் தரித்து இருந்தாளே.
உரை
   
2தரித்து இருந்தாள் அவள் தன் ஒளி நோக்கி
விரித்து இருந்தாள் அவள் வேதப் பொருளைக்
குறித்து இருந்தாள் அவள் கூறிய ஐந்து
மறித்து இருந்தாள் அவள் மாது நல்லாளே.
உரை
   
3மாது நல்லாளும் மணாளன் இருந்திடப்
பாதி நல்லாளும் பகவனும் ஆனது
சோதி நல்லாளைத் துணைப் பெய்ய வல்லிர் ஏல்
வேதனை தீர் தரும் வெள்ளடை ஆமே.
உரை
   
4வெள் அடையான் இரு மா மிகு மா மலர்க்
கள் அடையார் அக் கமழ் குழலார் மன
மள் அடையானும் வகைத் திறம் ஆய் நின்ற
பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே.
உரை
   
5பெண் ஒரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண் இடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற
பெண் உடை ஆண் இடைப் பேச்சு அற்ற வாறே.
உரை
   
6பேச்சு அற்ற நல் பொருள் காணும் பெரும் தகை
மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம்
காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து
ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே.
உரை
   
7ஆலிக்கும் கன்னி அரிவை மனோன் மணி
பாலித்து உலகில் பரந்து பெண் ஆகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே.
உரை
   
8உகந்து நின்றான் நம்பி ஒள் நுதல் கண்ணோடு
உகந்து நின்றான் நம் முழை புக நோக்கி
உகந்து நின்றான் இவ் உலகங்கள் எல்லாம்
உகந்து நின்றான் அவன் அன்றோ தொகுத்தே.
உரை
   
9குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்து அது சொல்ல கிலேனே.
உரை
   
10சொல்ல ஒண்ணாத அழல் பொதி மண்டலம்
சொல்ல ஒண்ணாது திகைத்து அங்கு இருப்பார்கள்
வெல்ல ஒண்ணாத வினைத் தனி நாயகி
மல்ல ஒண்ணாத மனோன்மணி தானே.
உரை
   
11தானே இரு நிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலும் ஆய் நிற்கும்
தானே வடவரைத் தண் கடல் கண்ணே.
உரை
   
12கண் உடையாளைக் கலந்து அங்கு இருந்தவர்
மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணாப்
பண் உடையார்கள் பதைப்பு அற்று இருந்தவர்
விண் உடையார்களை மேல் உறக் கண்டே.
உரை
   
13கண்டு எண் திசையும் கலந்து வரும் கன்னி
பண்டு எண் திசையும் பராசத்தியாய் நிற்கும்
விண்டு எண் திசையும் விரைமலர் கைக் கொண்டு
தொண்டு எண் திசையும் தொழ நின்ற கன்னியே.
உரை
   
14கன்னி ஒளி என நின்ற இச் சந்திரன்
மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி இருப்பிடம் சேர் பதினாறு உடன்
பன்னி இருப்பப் பராசத்தி ஆமே.
உரை
   
15பரா சத்தி என்று என்று பல் வகையாலும்
தரா சத்தி ஆன தலைப் பிரமாணி
இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும்
குராசத்தி கோலம் பல உணர்ந்தேனே.
உரை
   
16உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி
உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன்
புணர்ந்து ஒரு காலத்துப் போகம் அதுஆதி
இணைந்து பரம் என்று இசைந்து இது தானே.
உரை
   
17இது அப் பெருந்தகை எம்பெருமானும்
பொது அக் கல்வியும் போகமும் ஆகி
மதுவக் குழலி மனோன்மணி மங்கை
அது அக் கல்வியுள் ஆயுழி யோகமே.
உரை
   
18யோக நல் சத்தி ஒளி பீடம் தான் ஆகும்
யோக நல் சத்தி ஒளி முகம் தெற்கு ஆகும்
யோக நல் சத்தி உதர நடு ஆகும்
யோக நல் சத்தி தாள் உத்தரம் தேரே.
உரை
   
19தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற
வார்ந்து எழு மாயையும் மந்தம் அதாய் நிற்கும்
ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்து எழு கின்றனள் கோல்வளைதானே.
உரை
   
20தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை
தான் ஆன ஆறும் ஈர் ஏழும் சமகலை
தான் ஆன விந்து சகமே பரம் எனும்
தான் ஆம் பரவாதனை எனத் தக்கதே.
உரை
   
21தக்க பராவித்தை தான் இருபான் ஏழில்
தக்கு எழு ஓரும் திரம் சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண் சத்தி வெண் நிற முக் கண்ணி
தொக்க கதையோடு தொல் முத்திரை யாளே.
உரை
   
22முத்திரை மூன்றின் முடிந்த மெய்ஞ் ஞானத்தாள்
தத்துவமாய் அல்ல வாய சகலத்தாள்
வைத்த பராபரனாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.
உரை
   
23கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பைக் குலாம் கன்னி
பொங்கிய குங்குமத்து ஒளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும் அகிலம் கனி
தங்கும் அவள் மனை தான் அறிவாயே.
உரை
   
24வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண் பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரசனுக்குத்
தாயும் மகளும் தாரமும் ஆமே.
உரை
   
25தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள்
காரண காரியம் ஆகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பார் அளவாம் திசை பத்து உடையாளே.
உரை
   
26பத்து முகம் உடையாள் நம் பராசத்தி
வைத்தனள் ஆறு அங்க நாலுடன் தான் வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேர் இழை கூறே.
உரை
   
27கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறியள் ஆய் உலகு ஏழும் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை அமுத பயோதரி
பேர் உயிர் ஆளி பிறிவு அறுத்தாளே.
உரை
   
28பிறிவு இன்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறி ஒன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே
அறிவு ஒன்ற நின்றனள் ஆர் உயிர் உள்ளே.
உரை
   
29உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர் தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்து உடனே புல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.
உரை
   
30புரிந்து அருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்து அருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி இருந்த புதல்வி பூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே.
உரை
   
31இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து உன்னி
நிரந்தரம் ஆகிய நிரதி சய மொடு
பொருந்த இலக்கில் புணர்ச்சி அதுவே.
உரை
   
32அது இது என்னும் அவாவினை நீக்கித்
துதி அது செய்து சுழி உற நோக்கில்
விதி அது தன்னையும் வென்றிடல் ஆகும்
மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே.
உரை
   
33மூன்று மண்டலம் மோகினி சேர்விடம்
என்று உள ஈராறு எழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழ் இரண்டு இந்துவொடு ஈறே.
உரை
   
34இந்துவினின்று எழு நாதம் இரவி போல்
வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும் ஒலி
இந்துவின் மேல் உற்ற ஈறு அது தானே.
உரை
   
35ஈறு அது தான் முதல் எண் இரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி மனோ வசமாய் எழில்
தூறு அது செய்யும் சுகந்தச் சுழி அது
பேறு அது செய்து பிறந்து இருந்தாளே.
உரை
   
36இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாகத்
திருந்திய ஆனந்தம் செல் நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி
வருந்த இருந்தனள் மங்கை நல்லாளே.
உரை
   
37மங்கையும் மாரனும் தம்மொடு கூடி நின்று
அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கை நல்லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்கு செய்தாரே.
உரை
   
38சடங்கு அது செய்து தவம் புரிவார்கள்
கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில்
தொடர்ந்து எழு சோதி துளை வழி ஏறி
அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே.
உரை
   
39பாலித்து இருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்து எழு மந்திரம்
மூலத்து மேல் அது முத்து அது ஆமே.
உரை
   
40முத்து வதனத்தி முகம் தொறும் முக் கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என் உள்ளம் மேவி நின்றாளே.
உரை
   
41மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி
தாவிய நல் பதத் தண் மதியம் கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே.
உரை
   
42உள் ஒளி மூ இரண்டு ஓங்கிய அங்கங்கள்
வெள் ஒளி அங்கியின் மேவி அவரொடும்
கள் அவிழ் கோதைக் கலந்து உடனே நிற்கும்
கொள்ள விசுத்திக் கொடி அமுதம் ஆமே.
உரை
   
43கொடிய திரேகை குருஉள் இருப்பப்
படி அதுவார் உனைப் பைங் கழல் ஈசன்
வடிவு அது ஆனந்தம் வந்து முறையே
இடு முதல் ஆறு அங்கம் ஏந்திழையாளே.
உரை
   
44ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலை முதல் ஈர் எட்டும்
ஆந்தக் குளத்தியும் மந்திரர் ஆயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.
உரை
   
45சத்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்த அப்பாவிகள்
கத்திய நாய் போல் கதறு கின்றாரே.
உரை
   
46ஆரே திருவின் திருவடி காண்பார்கள்
நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்குக்
கார் ஏர் குழலி கமல மலர் அன்ன
சீர் ஏயும் சேவடி சிந்தை வைத்தாளே.
உரை
   
47சிந்தையில் வைத்துச் சிராதியிலே வைத்து
முந்தையில் வைத்துத் தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவு அதிலே வைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதி செய்வீரே.
உரை
   
48சமாதி செய்வார் கட்குத் தான் முதல் ஆகிச்
சிவாதி இலாரும் சிலை நுதலாளை
நவாதியில் ஆக நயந்து அது ஓதில்
உவாதி அவளுக்குறைவில தாமே.
உரை
   
49உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாள்தொரு நண்ணி
மறையுடனே நிற்கும் மற்றுள்ள நான்கும்
இறை தினைப் போதினில் எய்திடல் ஆமே.
உரை
   
50எய்திடல் ஆகும் இருவினையின் பயன்
கொய் தளிர் மேனிக் குமரி குலாம் கன்னி
மை தவழ் கண்ணி நல் மாதுரி கையொடு
கை தவம் இன்றிக் கருத்து உறும் வாறே.
உரை
   
51கருத்து உறும் காலம் கருதும் மனமும்
திருத்தி இருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண்மேல்
இருத்திடும் எண் குணம் எய்தலும் ஆகுமே.
உரை
   
52ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என
ஓம என்று ஓதி எம் உள் ஒளியாய் நிற்கும்
தாம நறும் குழல் தையலைக் கண்ட பின்
சோம நறு மலர் சூடி நின்றாளே.
உரை
   
53சூடிடும் அங்குச பாசத் துளை வழி
கூடும் இருவளைக் கோலக்கை குண்டிகை
நாடும் இருபத நல் நெடு ருத்திரம்
ஆடிடும் சீர்புனை ஆடகம் ஆமே.
உரை
   
54ஆம் அயன் மலரான் ஈசன் சதா சிவன்
தாம் அடி சூடி நின்று எய்தினர் தம் பதம்
காமனும் சாமன் இரவி கனல் உடன்
சோமனும் வந்து அடி சூட நின்றாளே.
உரை
   
55சூடும் இளம் பிறை சூலி கபாலினி
நீடும் இளம் கொடி நின் மலி நேர் இழை
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று
ஆடும் அதன் வழி அண்ட முதல்வியே.
உரை
   
56அண்டம் முதலாய் அவனி பரியந்தம்
கண்டது ஒன்று இல்லை கனம் குழை அல்லது
கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்ட அதனாலே.
உரை
   
57ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம் பதம்
சால வந்து எய்தும் தவத்து இன்பம் தான் வரும்
கோலி வந்து எய்தும் குவிந்த பதவை யோடு
ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே.
உரை
   
58மேல் ஆம் அரும்தவம் மேல் மேலும் வந்து எய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்து இடை
நாலா நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன்
மேல் ஆம் எழுத்தினள் ஆம் மத்தினாளே.
உரை
   
59ஆமத்து இனிது இருந்தன்ன மயத்தினள்
ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம நமசிவ என்று இருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவி நின்றாளே.
உரை
   
60நிலா மயம் ஆகிய நீள் படிகத்தின்
சிலா மயம் ஆகும் செழும் தரளத்தின்
சுலா மயம் ஆகும் சுரிகுழல் கோதை
கலா மயம் ஆகக் கலந்து நின்றாளே.
உரை
   
61கலந்து நின்றாள் கன்னி காதலனோடும்
கலந்து நின்றாள் உயிர் கற்பனை எல்லாம்
கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம்
கலந்து நின்றாள் கன்னி காலமும் ஆயே.
உரை
   
62காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்று ஆகும் கூட இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம் அது ஆமே.
உரை
   
63பாகம் பரா சத்தி பைம் பொன் சடை முடி
ஏகம் இருதயம் ஈர் ஐந்து திண்புய
மோக முகம் ஐந்து முக் கண் முகம் தொறும்
நாகம் உரித்து நடம் செய்யும் நாதர்க்கே.
உரை
   
64நாதனும் நால் ஒன்பதின்மரும் கூடி நின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை
வேதனும் ஈர் ஒன்பதின்மரும் மேவி நின்று
ஆதியும் அந்தமும் ஆகி நின்றாளே.
உரை
   
65ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள்
ஆகி நின்றாள் உடன் ஆகிய சக்கரத்து
ஆகி நின்றான் அவன் ஆயிழை பாடே.
உரை
   
66ஆய் இழையாள் ஒடும் ஆதிப் பரம் இடம்
ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள
ஆய மனம் தொறும் அறுமுகம் அவை தனில்
ஏய வார் குழலி இனிது நின்றாளே.
உரை
   
67நின்றனள் நேர் இழையோடு உடன் நேர்பட
இன்று என் அகம் படி ஏழும் உயிர்ப்பு எய்தும்
துன்றிய ஓர் ஒன்பதின்மரும் சூழல் உள்
ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே.
உரை
   
68உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே
மணந்து எழும் ஆம் கதி ஆகியது ஆகும்
குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்து எழும் காணும் அக் காமுகை ஆமே.
உரை
   
69ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும்
மா மது மண்டலம் மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிடக்
கோமலர் கோதையும் கோதண்டம் ஆகுமே.
உரை
   
70ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி
ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும்
ஆகும் பரா பரையோடு அப்பரையவள்
ஆகும் அவள் ஐங் கருமத்தள் தானே.
உரை
   
71தான் இகழ் மோகினி சார்வான யோகினி
போன மயம் உடையார் அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய வச்சி வந்து
ஆனாம் பரசிவம் மேலது தானே.
உரை
   
72தான் அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி ஆம் பொன் திருவொடு
மோனையில் வைத்து மொழி தரு கூறது
ஆனவை ஓம் எனும் அவ் உயிர் மார்க்கமே.
உரை
   
73மார்க்கங்கள் ஈன்ற மனோன் மணி மங்கலி
யார்க்கும் அறிய அரியவள் ஆகும்
வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண் அறிவு ஆமே.
உரை
   
74நுண் அறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்குப்
பின் அறிவு ஆகும் பிரான் அறி அத்தடம்
செந் நெறி ஆகும் சிவ கதி சேர்வார்க்குத்
தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே.
உரை
   
75சன்மார்க்கம் ஆகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்கம் ஆனவை எல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நல்நெறி ஆவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்தி என்பாளே.
உரை
   
76சத்தியும் நானும் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதல் அறிவார் இல்லை
அத்தி மேல் வித்து இடில் அத்தி பழுத்தக்கால்
மத்தில் ஏற வழி அதுவாமே.
உரை
   
77அது இது என்ற அவமே கழியாதே
மது விரி பூங் குழல் மங்கை நல்லாளைப்
பதி மது மேவிப் பணிய வல்லார்க்கு
விதி வழி தன்னையும் வென்றிடல் ஆமே.
உரை
   
78வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும்
வென்றிடல் ஆகும் வினைப் பெரும் பாசத்தை
வென்றிடல் ஆகும் விழை புலன் தன்னையும்
வென்றிடு மங்கை தன் மெய் உணர்வோர்க்கே.
உரை
   
79ஓர் ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரம் இது
மாரம் குழலாளும் அப்பதி தானும் முன்
சாரும் பதம் இது சத்தியம் ஆமே.
உரை
   
80சத்தியி னோடு சயம்புவும் நேர் படில்
வித்து அது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும்
சித்தது மேவித் திருந்திடுவாரே.
உரை
   
81திருந்து சிவனும் சிலைநுதலாளும்
பொருந்திய வானவர் போற்றி செய்து ஏத்த
அருந்திட அவ்விடம் ஆரமுதாக
இருந்தனள் தான் அங்கு இளம் பிறை என்றே.
உரை
   
82என்றும் எழுகின்ற வேரினை எய்தினார்
அன்று அது ஆகுவர் தார் குழலாளொடு
மன் தரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதி நின்றாளே.
உரை
   
83நின்றனள் நேர் இழையா ளொடு நேர்பட
ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே.
உரை
   
84தோன்றிடும் வேண்டு உரு ஆகிய தூய் நெறி
ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல்கலை
மான் தரு கண்ணியும் மாரனும் வந்து எதிர்
சான்று அது ஆகுவர் தாம் அவள் ஆயுமே.
உரை
   
85ஆயும் அறிவும் கடந்து அணு வாரணி
மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும்
சேய அரிவை சிவ ஆனந்த சுந்தரி
நேயம் அதா நெறி ஆகி நின்றாளே.
உரை
   
86நெறி அதுவாய் நின்ற நேர் இழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிடல் ஆமே.
உரை
   
87ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி
ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேம் மயம் ஆளும் தெனாது என என்றிடும்,
மா மயம் ஆனது வந்து எய்தலாமே.
உரை
   
88வந்து அடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதல் ஆக எண் திசையோர் களும்
கொந்து அணியும் குழலாள் ஒடு கோனையும்
வந்தனை செய்யும் வழி நவில் வீரே.
உரை
   
89நவிற்று நல் மந்திரம் நல் மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்து எரிதீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக் கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனைதானே.
உரை
   
90தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு இலி
பூங்கிளி தங்கும் புரிகுழலாள் அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.
உரை
   
91பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர்
அற் கொடி மாது உமையார் அத் தலைமகள்
நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை
வில் கொடி மாதை விரும்பி விளங்கே.
உரை
   
92விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை
துளங்கு பரா சத்தி தூங்கு இருள் நீங்கக்
களம் கொள் மணியுடன் காம வினோதம்
உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே.
உரை
   
93தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பது என் அன்பின் பெருமை
விடம் கொள் பெரும் சடை மேல் வரு கங்கை
ஒடுங்கி உமை யொடும் ஓர் உரு ஆமே.
உரை
   
94உருவம் பல உயிராய் வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர் உற நாடில்
புரிவளைக் கைச்சி எம் பொன் அணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.
உரை
   
95மாயம் புணர்க்கும் வளர் சடையான் அடித்
தாயம் புணர்க்கும் சல நதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி
ஆயம் புணர்க்கும் அவ் யோனியும் ஆமே.
உரை
   
96உணர்ந்து ஒழிந்தேன் அவன் ஆம் எங்கள் ஈசனை
புணர்ந்து ஒழிந்தேன் புவனா பதியாரை
அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்து ஒழிந்தேன் தன் அருள் பெற்றவாறே.
உரை
   
97பெற்றான் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நன்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்து அறிவார் கட்குப்
பொன்தான் உலகம் புகல் தனியாமே.
உரை
   
98தனி நாயகன் தனோடு என் நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர்
பனியான் மலர்ந்த பைம் போதுகை ஏந்தி
கனியாய் நினைவது என் காரணம் அம்மையே.
உரை
   
99அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கையாய் நிற்கும்
இம்மனை செய்த இந் நில மங்கையும்
அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே.
உரை
   
100அம்மையும் அத்தனும் அன்பு உற்றது அல்லது
அம்மையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை
அம்மே யோடு அத்தனும் யானும் உடன் இருந்து
அம்மை யொடு அத்தனை யான் புரிந்தேனே.
உரை