ஏழாம் தந்திரம்

4. சதாசிவ லிங்கம்

1கூடிய பாதம் இரண்டும் படி மிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து
தேடுமுகம் ஐந்து செங் கணின் மூ ஐந்து
நாடும் சதா சிவ நல் ஒளி முத்தே.
உரை
   
2வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன்
மீது ஆன ஐம் முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதாரணம் ஆம் சதா சிவம் தானே.
உரை
   
3ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின்
ஆகின்ற சத்தி உள் அத்திசை பத்தே.
உரை
   
4அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன ஆறு அங்கம்
அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக்கு உள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே.
உரை
   
5சமயத்து எழுந்த அவத்தை ஈர் ஐந்து உள
சமயத்து எழுந்த இராசி ஈர் ஆறு உள
சமயத்து எழுந்த சதி ஈர் ஆறு எட்டு உள
சமயத்து எழுந்த சதா சிவம் தானே.
உரை
   
6நடுவு கிழக்குத் தெற்குத் தர மேற்கு
நடுவு படிக நல் குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற்கு அருளிய முகம் இவை அஞ்சே.
உரை
   
7அஞ்சு முகம் உள ஐம் மூன்று கண் உள
அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள
அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என்
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே.
உரை
   
8சத்தி தராதலம் அண்டம் சதா சிவம்
சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவ தத்துவம் முப்பத்து ஆறே.
உரை
   
9தத்துவம் ஆவது அருவம் சராசரம்
தத்துவம் ஆவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமும் ஆய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதா சிவன் தானே.
உரை
   
10கூறுமின் ஊறு சதா சிவன் எம் இறை
வேறு ஓர் உரை செய்து மிகைப் பொருளாய் நிற்கும்
ஏறு உரை செய் தொழில் வானவர் தம்மொடு
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே.
உரை
   
11இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருள் ஆர்ந்த செஞ் சடைச் சோதிப் பிறையும்
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதிப் பிரானைத்
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே.
உரை
   
12சத்தி தான் நிற்கின்ற ஐம் முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புருடன் சிரம்
அத் தகு கோரம் மகுடத்து ஈசனே.
உரை
   
13நாணு நல் ஈசான நடுஉச்சி தான் ஆகும்
தாணுவின் தன் முகந்து தற் புருடம் ஆகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாண் உற வாமம் ஆம் சத்தி நல் பாதமே.
உரை
   
14நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண் ஆம்
வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சை ஆம்
செஞ்சு உறு செஞ் சுடர் சேகரி மின் ஆகும்
செஞ் சுடர் போலும் தெசாயுதம் தானே.
உரை
   
15எண் இல் இதயம் இறை ஞான சத்தி ஆம்
விண்ணில் பரை சிரமிக்க சிகை ஆதி
வண்ணக் கவசம் வனப்பு உடை இச்சை ஆம்
பண்ணும் கிரியை பர நேத்திரத்திலே.
உரை
   
16சத்தி நால் கோணம் சலம் உற்று நின்றிடும்
சத்தி அறு கோணம் சயனத்தை உற்றிடும்
சத்தி நல் வட்டம் சலம் உற்று இருந்திடும்
சத்தி உரு ஆம் சதா சிவன் தானே.
உரை
   
17மா நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தா நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே.
உரை
   
18ஒன்றிய வாறும் உடலின் உடன் கிடந்து
என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது
தென் தலைக்கு ஏறத் திருந்தும் சிவன் அடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.
உரை
   
19உணர்ந்தேன் உலகினில் ஒண் பொருளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.
உரை
   
20ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிடத்
தாங்கிடும் ஈர் ஏழு தான் நடு ஆனதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம் என
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே.
உரை
   
21தன் மேனி தன் சிவலிங்கம் ஆய் நின்றிடும்
தன் மேனி தானும் சதா சிவம் ஆய் நிற்கும்
தன் மேனி தன் சிவன் தன் சிவ ஆனந்தம் ஆம்
தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே.
உரை
   
22ஆரும் அறியார் அகாரம் அவன் என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதும் ஆய்
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே.
உரை
   
23இலிங்க நல் பீடம் இசையும் ஓங் காரம்
இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்ட நிறையும் உகாரம்
இலிங்க மகார நிறை விந்து நாதமே.
உரை