ஏழாம் தந்திரம்

8. சம்பிரதாயம்

1உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர் வினை பற்று அறப் பார்த்துக் கை வைத்து
நொடியின் அடி வைத்து நுண் உணர்வு ஆக்கிக்
கடிய பிறப்பு அறக் காட்டினன் நந்தியே.
உரை
   
2உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன
வியவார் பரமும் பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற் சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் உய்யக் கொண்டானே.
உரை
   
3பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலும் என்னை நினை என்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது
வைச்ச பதம் இது வாய் திறவாதே.
உரை
   
4பொட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவேனை
பொட்டடித்து உள்ளமார் மாசு எல்லாம் வாங்கிப்பின்
தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே.
உரை
   
5தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம்
கருக் கொண்ட ஈசனைக் கண்டு கொண்டேனே.
உரை
   
6கூடும் உடல் பொருள் ஆவி குறிக் கொண்டு
நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்று அற நீக்கியே
கூடிய தான் அவன் ஆம் குளிக் கொண்டே.
உரை
   
7கொண்டான் அடியேன் அடிமை குறிக் கொள்ளக்
கொண்டான் உயிர் பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலம் முற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் என ஒன்றும் கூற கிலேனே.
உரை
   
8குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலை பெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறக்க அறியா தார் பேயுடன் ஒப்பாரே.
உரை
   
9உணர்வு உடையார் கட்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார் கட்கு உறு துயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அக் காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே.
உரை
   
10காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆய அவ்வாறு அடைந்து திரிந்தோர்க்குத்
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே.
உரை
   
11நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல்
ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று
வான் என வானவர் நின்று மனிதர்கள்
தேன் என இன்பம் திளைக்கின்ற வாறே.
உரை
   
12அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே.
உரை
   
13நான் இது தான் என நின்றவன் நாள் தோறும்
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான் இரு மாமுகில் போல் பொழிவான் உளன்
நான் இது வம்பர நாதனும் ஆமே.
உரை
   
14பெரும் தன்மை தான் என யான் என வேறு ஆய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்
பொருந்தும் உடல் உயிர் போலும் ஐ மெய்யே
திருந்த முன் செய்கின்ற தேவர் பிரானே.
உரை