ஏழாம் தந்திரம்

21. விந்து சயம் - போக சர வேட்டம்

1பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று போய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்
பார்க்கின்ற கண் ஆசை பாழ் பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவ யோகி தானே.
உரை
   
2தானே அருளால் சிவயோகம் தங்காது
தானே அக் காமம் ஆதி தங்குவோனும் உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும்
ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே.
உரை
   
3மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில்
ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள்
ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்று இரண்டு
ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே.
உரை
   
4ஆறு ஐந்து பன் னொன்றும் அன்றிச் சக மார்க்கம்
வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின் னந்தோடு
ஏறும் இரு பத்து ஒரு நாள் இடைத்து ஓங்கும்
ஆறின் மிகுத்து ஓங்கும் அக்காலம் செய்யவே.
உரை
   
5செய்யும் அளற்று இரு நால் முகூர்த்தமே
எய்யும் கலை காலம் இந்து பருதி கால்
நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே.
உரை
   
6விடும் காண் முன் ஐந்திரியங்களைப் போல்
நடுங்காது இருப்பானும் ஐ ஐந்து நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்று அற விட்டுக்
கடுங்கால் கரணம் கருத்து உறக் கொண்டே.
உரை
   
7கொண்ட குணனே நலனே நல் கோமளம்
பண்டை உருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட கரணம் உள் செல்லக் கண்டு ஏவிடே.
உரை
   
8விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே
தொட்டு உறும் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ் நாள் சா நாள் குணம் கீழ்மை சீர்ப்
பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே.
உரை
   
9பார்த்திட்டு வைத்துப் பரப்பு அற்று உருப் பெற்று
வார்ச்சென்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்து உற்ற இரு திங்கள் சேராது அகலினும்
மூப்பு உற்றே பின் நாளில் ஆம் எல்லாம் உள்ளவே.
உரை
   
10வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை
வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை
வித்தினில் வித்தை விது அர உணர்வ ரேல்
மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே.
உரை
   
11கருத்தினில் அக்கரம் ஆய் உயவும் யாவும்
கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும்
கருத்தது வித்தாய்க் காரண காரியம்
கருத்து உறுமாறு இவை கற்பனை தானே.
உரை
   
12ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலம் சத்தி
ஒழியாத புத்தி தபம் செபம் மோனம்
அழியாத சித்தி உண்டாம் விந்து வற்றிலே.
உரை
   
13வற்ற அனலைக் கொளுவி மறித்து ஏற்றி
உற்ற சுழி அனல் சொருகிச் சுடர் உற்று
முற்று மதியத்து அமுதை முறை முறை
செற்று உண்பவரே சிவ யோகியாரே.
உரை
   
14யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் உரை அமிர் உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.
உரை
   
15அண்ணல் உடல் ஆகி அவ் அனல் விந்துவும்
மண் இடை மாய்க்கும் பிராணன் ஆம் விந்துவும்
கண்ணும் கனல் இடைக் கட்டி கலந்து எரித்து
உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே.
உரை
   
16அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்பு கின்றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருந்து சேரவே மாயுமே.
உரை
   
17மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்னக்
காதல் அது ஆகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சத கோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே.
உரை
   
18காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன்
காலம் கடந்து அழிந்தான் விந்து செற்றவன்
காலங்களின் விந்து செற்று உற்ற காரிகை
காலின் கண் வந்த கலப்பு அறியாரே.
உரை
   
19கலக்கு நாள் முன்னாள் தன் இடைக் காதல்
நலத் தக வேண்டில் அந் நாரி உதரக்
கலத்தின் மலத்தைத் தண் சீதத்தைப் பித்தை
விலக்குவன செய்து மேல் அணைவீரே.
உரை
   
20மேலா நிலத்து எழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறி வழியே சென்று
பால் ஆம் அமிர்து உண்டு பற்று அறப் பற்றினால்
மால் ஆனது மாள மாளும் அவ் விந்துவே.
உரை
   
21விந்து விளையும் விளைவின் பயன் முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாதமும் நாதத்தால் பேதமும்
தந்து உணர்வோர்க்குச் சயம் ஆகும் விந்துவே.
உரை
   
22விந்து என் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியினாலே நயம் தெரித்து
அந்தம் இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றிச்
சந்திரன் சார்பு உறத் தண் அமுது ஆமே.
உரை
   
23அமுதச் சசிவிந்து ஆம் விந்து மாள
அமுதப் புனல் ஓடி அங்கியின் மாள
அமுதச் சிவ போகம் ஆதலால் சித்தி
அமுதப் பலாவன ஆங்கு உறும் யோகிக்கே.
உரை
   
24யோகம் அவ் விந்து ஒழியா வகை புணர்ந்து
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறாப்
போகம் சிவபோகம் போகி நல் போகமா
மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே.
உரை
   
25மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலின் ஆல் விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிர் ஆசை கைக் கொண்டே வாடுவர்
காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே.
உரை
   
26சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழ மூட்டி
நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே.
உரை
   
27விந்துவும் நாதமும் மேவக் கனல் மூல
வந்தவன் நன் மயிர்க்கால் தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவ மகம் ஆகவே
விந்துவும் மாளும் மெய்க் காயத்தில் வித்திலே.
உரை
   
28வித்துக் குற்று உண்பான் விலை அறியாதவன்
வித்துக் குற்று உண்ணாமல் வித்துச் சுட்டு உண்பவன்
வித்துக் குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன்
வித்துக் குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே.
உரை
   
29அன்னத்தில் விந்து அடங்கும் படி கண்டு
மன்னப் பிராணன் ஆம் விந்து மறித்திட்டு
மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட
அன்ன அத் திரு விந்து ஆயும் காயத்திலே.
உரை
   
30அன்னம் பிராணன் என்றார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்ன மாம் உருத்தோன்றும் எண் சித்தி ஆம்
அன்னவர் எல்லாம் அழிவு அற நின்றதே.
உரை
   
31நின்ற சிகாரம் நினைக்கும் பிராணன் ஆய்
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை
சென்று பரா சத்தி விந்து சயம் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே.
உரை
   
32தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை
வானே உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.
உரை
   
33விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்த இப் பல் உயிர் மன் உயிர்க்கு எலாம்
அந்தமும் ஆதியும் ஆம் மந்திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.
உரை
   
34வறுக்கின்ற வாறு மனத்து உலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள் வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும் அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள் வரும் அத்திப் பழமே.
உரை
   
35விந்துவும் நாதமும் மேவி உடன் கூடிச்
சந்திரனோடே தலைப் படும் ஆயிடில்
அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே.
உரை
   
36மனத்தொடு சத்து மனம் செவி அன்ன
இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே.
உரை
   
37சத்தமும் சத்த மனமும் மனக் கருத்து
ஒத்து அறிகின்ற இடமும் அறிகிலர்
மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ் இடம் தானே.
உரை
   
38உரமடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன் முலை மேவிய கீழ் அங்கி
கரு முலை மீ மிசை கைக் கீழில் கால் ஆம்
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே.
உரை