ஏழாம் தந்திரம்

22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்

1செஞ் சுடரோன் முதல் ஆகிய தேவர்கள்
மஞ்சு உடை மேரு வலம் வரு காரணம்
எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி
அம் சுடர் ஆக வணங்கும் தவமே.
உரை
   
2பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம்
புகலவன் ஆய் நின்ற புண்ணிய நாதன்
இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும்
பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே.
உரை
   
3ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும்
சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.
உரை
   
4தானே உலகுக்குத் தத்துவன் ஆய் நிற்கும்
தானே உலகுக்குத் தையலும் ஆய் நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவும் ஆய் நிற்கும்
தானே உலகுக்குத் தண் சுடர் ஆகுமே.
உரை
   
5வலைய முக் கோணம் வட்டம் அறு கோணம்
துலை இரு வட்டம் துய்ய விதம் எட்டில்
அலை உற்ற வட்டத்தில் ஈர் எட்டு இதழ் ஆம்
மலைவு அற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே.
உரை
   
6ஆதித்தன் உள்ளில் ஆன முக் கோணத்தில்
சோதித்து இலங்கும் நல் சூரியன் நூல் ஆங்கு
ஏதம் உறும் கேணி சூரியன் எட்டில்
சோதி தன் ஈர் எட்டில் சோடசம் தானே.
உரை
   
7ஆதித்தனோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகிலீரே.
உரை
   
8பாருக்குக் கீழே பகலோன் வரும் வழி
யாருக்கும் காண ஒண்ணாத அரும் பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.
உரை
   
9மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும்
கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.
உரை
   
10பாரை இடந்து பகலோன் வரும் வழி
யாரும் அறியார் அருங் கடை நூலவர்
தீரன் இருந்த திரு மலை சூழ் என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே.
உரை
   
11நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்று ஆய நந்திக் கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.
உரை
   
12ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம்
ஆதித்தனோடே அடங்கு கின்றாரே.
உரை
   
13உருவிப் புறப்பட்டு உலகை வலம் வந்து
சொருகிக் கிடக்கும் துறை அறிவார் இல்லை
சொருகிக் கிடக்கும் துறை அறிவாளர்க்கு
உருகிக் கிடக்கும் என் உள் அன்பு தானே.
உரை
   
14எறிகதிர் ஞாயிறு மின் பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே வியங்கும் என் ஆவி
ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே.
உரை
   
15சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை
முந்திய பானுவில் இந்து வந்தேய் முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே.
உரை
   
16ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி
ஆகும் கலை இடை நான்கு எனல் ஆம் என்பார்
ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற
ஆகும் அப் பூரனை ஆம் என்று அறியுமே.
உரை
   
17ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது
பேர் அண்டத்து ஊடே பிறங்கு ஒளியாய் நின்ற
தார் அண்டத் தக்கார் அரியத்தக்காரே.
உரை
   
18ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும்
ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை
முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார்
இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே.
உரை
   
19விந்து அபரம் பரம் இரண்டாய் விரிந்து
அந்த அபரம் பரம் நாதம் ஆகியே
வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து
உந்தும் அருணோ தயம் என்ன உள்ளத்தே.
உரை
   
20உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான்
தெள்ளும் பர நாதத்தின் செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு
உள்ளன ஐம் கலைக்கு ஒன்றாம் உதயமே.
உரை
   
21தேவர் பிரான் திசை பத்தும் உதயம் செய்யும்
மூவர் பிரான் என முன் ஒரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.
உரை
   
22பொய் இலன் மெய்யன் புவனா பதி எந்தை
மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று
கை இருள் நீங்கக் கலந்து எழுந்தானே.
உரை
   
23தனிச்சுடர் எற்றித் தயங்கு இருள் நீங்க
அனித்திடு மேலை அரும் கனி ஊறல்
கனிச் சுடராய் நின்ற கயிலையில் ஈசன்
நனிச் சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே.
உரை
   
24நேர் அறிவாக நிரம்பிய பேர் ஒளி
போர் அறியாது புவனங்கள் போய் வரும்
தேர் அறியாத திசை ஒளி ஆய் இடும்
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே.
உரை
   
25மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன்
கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும்
சென்றிடத்து எட்டுத் திசை எங்கும் போய்வரும்
நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே.
உரை
   
26நாபிக் கண் நாசி நயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர் விடும் சோதியை
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே.
உரை
   
27அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும்
சென்றிடு ஞானச் சிவப் பிரகாசத்தால்
ஒன்றும் இரு சுடர் ஆம் அருண உதயம்
துன்று இருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.
உரை
   
28கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப் பரிசு ஆமே.
உரை
   
29தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும்
தானே அயன் மால் என நின்று தாபிக்கும்
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன்
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே.
உரை
   
30தெய்வச் சுடர் அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல் அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல் உயிர்
ஐவர்க்கு இடம் இடை ஆறு அங்கம் ஆமே.
உரை