ஏழாம் தந்திரம்

29. கேடு கண்டு இரங்கல்

1வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார்
முற்று ஒளிதீயின் முனிகின்ற வாறே.
உரை
   
2போது சடக் எனப் போகின்றது கண்டும்
வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது
நீதி உள்ளே நின்று நின் மலன் தாள் பணிந்து
ஆதியை அன்பில் அறிய கில்லார்களே.
உரை
   
3கடன் கொண்டு நெல் குத்துக் கையரை ஊட்டி
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவர்
தடம் கொண்ட சாரல் தழல் முருடு ஏறி
இடம் கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே.
உரை
   
4விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன
பரம் தன்னை ஓராப் பழி மொழி யாளர்
உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே.
உரை
   
5நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும்
என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும்
அன்றி உலகம் அது இது தேவென்று
குன்று கையாலே குறைப் பட்ட வாறே.
உரை
   
6இன்பத்து உளே பிறந்து இன்பத்து உளே வளர்ந்து
இன்பத்து உளே நினைக்கின்ற இது மறந்து
துன்பத்து உளே சிலர் சோ றொடு கூறை என்று
துன்பத்து உளே நின்று தூங்கு கின்றார்களே.
உரை
   
7பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியது ஓர் பேர் இழந்தாரே.
உரை
   
8ஆர்வ மனமும் அளவு இல் இளமையும்
ஈரமும் நல்ல என்று இன்பு உறு காலத்துத்
தீர வருவது ஓர் காமத் தொழில் நின்று
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே.
உரை
   
9இப் பரிசே இள ஞாயிறு போல் உரு
அப் பரிசு அங்கியின் உள் உறை அம்மானை
இப் பரிசே கமலத்து உறை ஈசனை
மெய்ப் பரிசே வினவாது இருந்தோமே.
உரை
   
10கூட கில்லார் குரு வைத்த குறி கண்டு
நாட கில்லார் நயம் பேசித் திரிவர்கள்
பாட கில்லார் அவன் செய்த பரிசு அறிந்து
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே.
உரை
   
11நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர்
நஞ்சு எம்பிரான் என்று நாதனை நாள் தொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழா விடில்
அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே.
உரை
   
12மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர் செய் அன்பு வைத்து உன்னாதது இல்லை
பருகுவரோடு அவர் பார்ப்பயன் கொள்வர்
திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே.
உரை
   
13நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனைச்
சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை
ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று
நாதியே வைத்து அது நாடுகின்றேனே.
உரை
   
14இரும் தேன் மலர் அளைந்து இன்பு உற வண்டு
பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வரும் தேன் நுகராது வாய்புகு தேனை
அரும் தேனை யாரும் அறிய கிலாரே.
உரை
   
15கருத்து அறியாது கழிந்தன காலம்
அருத்தி உள்ளான் அமரா பதி நாதன்
ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம்
வருத்தி நில்லாது வழுக்கு கின்றாரே.
உரை
   
16குதித்து ஓடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே.
உரை
   
17கரை அருகு ஆறாக் கழனி விளைந்த
திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும்
வரை அருகு ஊறிய மாதவம் நோக்கின்
நரை உருவாச் செல்லும் நாள் இலவாமே.
உரை
   
18வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து
இரவு அறிவானை எழும் சுடர்ச் சோதியை
அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று
விரவு அறியாமலே மேல் வைத்த வாறே.
உரை