எட்டாம் தந்திரம்

4. அறிவுதயம்

1தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு இல்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே.
உரை
   
2அங்கே அடல் பெரும் தேவர் எல்லாம் தொழச்
சிங்கா சனத்தே சிவன் இருந்தான் என்று
சங்கார் வளையும் சிலம்பும் சரேல் எனப்
பொங்கார் குழலியும் போற்றி என்றாளே.
உரை
   
3அறிவு வடிவு என்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி
அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே
அறிவு வடிவு என்று அறிந்து இருந்தேனே.
உரை
   
4அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்று இட்டு
அறைகின்றன மறை ஈறுகள் தாமே.
உரை
   
5மன்னி நின்றார் இடை வந்த அருள் மாயத்து
முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின் வந்தான் ஓர் புகழ் திருமேனியைப்
பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே.
உரை
   
6அறிவு அறிவு ஆக அறிந்து அன்பு செய்ம்மின்
அறிவு அறிவு ஆக அறியும் இவ் வண்ணம்
அறிவு அறிவு ஆக அணிமா ஆதி சித்தி
அறிவு அறிவு ஆக அறிந்தனன் நந்தியே.
உரை
   
7அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்
அறிவு அறியாமை யாரும் அறியார்
அறிவு அறியாமை கடந்து அறிவானால்
அறிவு அறியாமை அழகிய வாறே.
உரை
   
8அறிவு அறியாமையை நீவி அவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போது
அறிவாய் அவற்றின் உள் தான் ஆய் அறிவின்
செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே.
உரை
   
9அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவது
அறிவுடையார் நெஞ்சு அரும் தவம் ஆவது
அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே.
உரை
   
10மாயனும் ஆகி மலரோன் இறையும் ஆய்க்
காய நல் நாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங் கரும்பு
ஆய அமுதாகி நின்று அண்ணிக் கின்றானே.
உரை
   
11என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கை விடாது
என்னை இட்டு என்னை உசாவு கின்றானே.
உரை
   
12மாய விளக்கு அது நின்று மறைந்திடும்
தூய விளக்கு அது நின்று சுடர் விடும்
காய விளக்கு அது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடு கின்றேனே.
உரை
   
13தேடு கின்றேன் திசை எட்டோடு இரண்டையும்
நாடு கின்றேன் நலமே உடையான் அடி
பாடுகின்றேன் பரமே துணை ஆம் எனக்
கூடுகின்றேன் குறையா மனத்தாலே.
உரை
   
14முன்னை முதல் விளையாட்டத்து முன்வந்து ஓர்
பின்னைப் பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன் தாள்
மன்னிச் சிவம் ஆக வாரா பிறப்பே.
உரை