ஒன்பதாம் தந்திரம்

12. சொரூப உதயம்

1பரம குரவன் பரம் எங்கும் ஆகித்
திரம் உற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று
நிரவு சொரூபத்து உள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்து நின்றானே.
உரை
   
2குலைக்கின்ற நீரில் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச
நிலத்து இடை வான் இடை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செயும் மாறு அறியேனே.
உரை
   
3அங்கு நின்றான் அயன் மால் முதல் தேவர்கள்
எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கி நின்றான் தனி நாயகன் எம் இறை
பொங்கி நின்றான் புவனா பதி தானே.
உரை
   
4சமையச் சுவடும் தனை அறியாமல்
கமை அற்ற காமம் ஆதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே.
உரை
   
5மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல் உரு
வாய் அது வேறு ஆம் அதுபோல் அணுப் பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர் பெற
ஏயும் நெறி என்று இறை நூல் இயம்புமே.
உரை
   
6உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும்
கரு அன்றியே நின்று தான் கரு ஆகும்
அரு அன்றியே நின்ற மாயப் பிரானைக்
குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே.
உரை
   
7உருவ நினைப்பவர்க்கு உள் உறும் சோதி
உருவ நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவ நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவ நினைப்பவர் உலகத்தில் யாரே.
உரை
   
8பரஞ்சோதி ஆகும் பதியினைப் பற்றாப்
பரஞ்சோதி எனுள் படிந்ததன் பின்னைப்
பரஞ்சோதி உண்ணான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.
உரை
   
9சொரூபம் உருவம் குணம் தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆம் ஆறு போல
மருவிய சத்தி ஆதி நான்கு மதித்த
சொரூபக் குரவன் சுகோதயம் தானே.
உரை
   
10உரை அற்ற ஆனந்த மோன சொரூபத்தன்
கரை அற்ற சத்தி ஆதி காணில் அகார
மரு உற்று உகார மகாரம் அது ஆக
உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே.
உரை
   
11தலை நின்ற தாழ்வரை மீது தவம் செய்து
முலை நின்ற மாது அறி மூர்த்தியை யானும்
புலை நின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலை நின்ற கள்வனில் கண்டு கொண்டேனே.
உரை
   
12ஆம் ஆறு அறிந்தேன் அகத்தின் அரும் பொருள்
போம் ஆறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே
ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை
நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே.
உரை