(அ. சி.) காத்து....காண்பர் - பல ஆயிர ஆண்டுகள் காண்பர். மூத்து - அறிவில் முதிர்ந்து. (19) 739. உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று அகங்கோடி கண்டு ளயலறக் காண்பர்கள் சிவங்கோடி விட்டுச்1 செறிய இருந்தங்கு உகங்கோடி கண்டங் குயருறு வாரே. (ப. இ.) ஊழிகளைப் கோடிகோடியாகக் கண்டும் தளர்வின்றி நிற்றலால் உள்ளத்திடத்துச் சிவபெருமானை வேறறக் காண்பர். முடிந்த இடமாகிய சிவபெருமானைக் கண்டவர்கள் தன்முனைப்பற்றுச் சிவபெருமானுடன் புணர்ந்துநின்று அளவில் கோடி உகங்கண்டு உயர்வற உயர்நலம் எய்துவர். நின்று என்பது நிற்ப எனத் திரிந்து நின்றது. (அ. சி.) சிவங்கோடி - சிவமே முடிந்த இடமாக. (20) 740. உயருறு வாருல கத்தொடுங் கூடிப் பயனுறு வார்பலர் தாமறி யாமற் செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற் கயலுறு கண்ணியைக் காணகி லாரே. (ப. இ.) உயர்ந்தோர் சிலர். உலகோர்போலத் தம்மிழப்புடன் செயல் செய்வர்; (அதனால் வினைப்பயனால் கட்டுண்ணார்.) பலர் இம்மை மறுமையில் எண்ணமில்லாமல் உலகத்தோடுங் கூடிய பிறப்புப்பயனையே அடைவர். அவர் அங்கயற்கண்ணியாம் அம்மையை உணரமாட்டார். (அ. சி.) செயல் உறுவார் - கன்மங்களைச் செய்வார். (21) 741. காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள் நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள் காணகி லாதார் கழிந்த பொருளெலாங் காணகி லாமற் கழிகின்ற வாறே. (ப. இ.) திருவருளைக் காணப்பெறாதார் மீண்டும் பிறத்தற் பொருட்டு மாள்வர். பிறவி எடுப்பதில் நாணங்கொள்ளாதவர் உலக நயங்களைப் பேசிக் கழிவர் (நூல்நயங்கள் எனினும் அமையும்). மெய்ப் பொருளுண்மை காணமாட்டாதார் கழிந்த பொருள்களின் நிலையாமையை அறியாத்தன்மையரே யாவர். (22) 742. கழிகின்ற அப்பொருள் காணகி லாதார் கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங் கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற் கழியாத அப்பொருள் காணலு மாமே.
1. நசித்தொன்றின். சிவஞானபோதம், 11. 2 - 3.
|