சடைக்கற்றை திருமேனிபோன்று செம்மையுடையதாகத் திகழும். அதன் கண் வளரும் ஒளியுடைப் பிறை விளக்க விளங்கும் இயல்புடைய ஆருயிர்களைக் குறிக்கும் . இவையே ஆதிப்பிரான் திருவடையாளங்களாகும். அவர்தம் திருவருள் துணையால் அடியேன் எண்ணத்தின் மருள் அகன்றது; திருவடியுணர்வாகிய தெருள் நிறைந்தது. அதனால் மெய்ப்பொருள் தெளிந்திருந்தேன். ஆதிப்பிரான்: அம்மையோடு கூடிய அப்பன். ஆதி - அம்மை. (11) 1711. சத்திதான் நிற்கின்ற ஐம்முகஞ் சாற்றிடில் உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி பச்சிமம் பூருவம் தற்புரு டன்னுரை தெற்கி லகோரம் வடகிழக் கீசனே.1 (ப. இ.) திருவருளாற்றல் விளங்கி நிற்கின்ற ஐந்து திருமுகங்களையும் சொல்லுமிடத்து வடக்குத் திருமுகம் வாமதேவமென்னும் விளக்கமாகும். புகழ்ந்து சொல்லப்படும் சத்தியோசாதம் என்னும் தோன்று வித்தல் மேற்கு முகமாகும் . கிழக்குத் திருமுகம் தற்புருடம் என்னும் ஆட்சியாகும். சீர்த்திமிக்க தெற்குத் திருமுகம் அகோரம் என்னும் நடுக்கமாகும். வடகிழக்குத் திருமுகம் ஈசானன் என்னும் இயக்கமாகும். ஈசானம் வடிகீழ்ப்புலமென்றே வழங்கப்படுகின்றது. இவ் வழக்குமுறை திருநாவுக்கரசு நாயனார் அருளிய திருப்பாட்டானு முணரலாம். "ஞாயிறாய் நமனுமாகி வருணனாய்ச் சோமனாகித் தீயறா நிருதிவாயுத் திப்பிய சாந்தனாகிப் பேயறாக் காட்டிலாடும் பிஞ்ஞக னெந்தைபெம்மான் தீயறாக் கையர்போலுந் திருப்பயற் றூரனாரே." 4.32 - 6. எனவே இதற்கியைப் பொருள்கொள்ளுங்கால் பாட வேறுபாடு கொள்ளுதல் வேண்டும். இப்பொழுதுள்ள பாட்டும் தளைதட்டுதல் என்னும் பொருந்தும் யாப்பமைதியும் பெறவில்லை. அஃதாவது தளைதட்டாமலிருக்கின்றது. ஆதலால் அப் பாடம் 'தெற்கில கோரம் வடகிழக் கீசனே' என்றிருத்தல் வேண்டும். அங்ஙனமே அமைத்துப் பாட வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. (அ. சி.) இம் மந்திரம் ஐம்முகங்களும் எத்திசைகளை நோக்குகின்றன என்பதை விளக்குகிறது. (12) 1712. நாணுநல் லீசான நடுவுச்சி தானாகுந் தாணுவின் றன்முகந் தற்புருட மாகுங் காணும் அகோரம் இருதயங் குய்யமா மாணுற வாமமாஞ் சத்திநற் பாதமே. (ப. இ.) ஐம்பெரும் மந்திரங்கள் குறிக்கும் முறை வருமாறு : 'பொக்கமிக்கவா பூவும்நீருங்கண்டு' நாணும் தன்மை வடிவாகிய ஈசான மறையை உச்சியிற் சுட்டுக . தற்புருடம் என ஓதி முகத்திற் சுட்டுக. அகோரம் என ஓதி நெஞ்சிற் சுட்டுக. சிறந்த வாமதேவமென வோதிக்
1. (பாடம்) தென்கிழக்கீசனே.
|