அத்துடன் அமைந்துவிடுகின்றனர். அஃது அகத்தே விளங்கும் திருவருள் நெறியாகிய கன்னித்துறை படிந்தாடுதற்கு வழியென்று நினைந்து ஆண்டுச் சென்று பயிலும் கருத்துடையரல்லர். அத் திருவருள் நெறிச் செல்லும் கருத்துண்டாகுமானால் அவர் பிறவாப் பெருநெறி பற்றிப் பிறப்பற்றுச் சிறப்புற்று வாழ்வர். (அ. சி.) கன்னித்துறை - சத்தி பொருந்துதலுக்கு உரிய வழி. (2) 1494. செய்யன் கரியன் வெளியன்நற் பச்சையன் எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங் கைய னிவனென்று காதல்செய் வீரே.1 (ப. இ.) படைத்தல் காத்தல் துடைத்தல் மறைத்தல் ஆகிய உலகியற்றொழில் நான்கிற்கும் கொள்ளும் திருமேனியின் நிறம் முறையே செம்மை, கருமை, பசுமை என்ப. இறைவன் இந் நிறங்களை மேற்கொள்கின்றனன் என்னும் உண்மையைப் பொருந்த உணர்ந்தவர் அவன் திருவடியினை அடைவர். எய்வர்; எய்துவர் என்பது எய்வரெனக் குறைந்து நின்றது. அவனே அறியாமைச் சார்பாகத் தோன்றிய தன் முனைப்பாகிய யானையினைத் தற்கிழமைப் பொருளாகிய நகத்தால் உரித்துப் போர்த்தனன். மழுவாகிய தீயினைக் கையில் தாங்கியவனும் அவனே. இம் முறைமையினை நினைந்து அவன்பால் பேரன்பு பூணுங்கள். இந் நிறவைப்புக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானில வைப்பமைவினை நினைவுறுத்துவதாகும். (அ. சி.) செய்யன் - அயன். கரியன் - அரி. வெளியன் - அரன் (உருத்திரன்). பச்சையன் - ஈசன் (மகேசன்) மை வென்றகன்ற பகடு - யானை. வெங்கையன் - வேம் + கையன் - இடக் கரத்தில் எரி. (3) 1495. எய்திய காலங்கள் எத்தனை யாயினுந் தையலுந் தானுந் தனிநா யகமென்பர் வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்2 கையிற் கருமஞ்செய் காட்டது வாமே. (ப. இ.) உலகினுக்கு எத்தனை ஊழிகள் செல்லினும் சிவையும் சிவனும் ஒப்பில்லாத முழு முதன்மையராவரென்பர். நாடோறும் தம்மை வணங்கும் மெய்யடியார்கட்கு உண்மையறிவின்ப அடையாளத் திருக்கையால் மெய்ப்புணர்ப்புற்றிருக்கும் தவநிலையாற்றக் காட்டியருள்வர். அடையாளக் காட்டதுவுமாகும். உண்மையறிவின்ப அடையாளம் - சின் முத்திரை. அடையாளம் - பொறி. (அ. சி.) கையில் - சின்முத்திரையால். கருமஞ் செய் காட்டு - யோகம் செய் என்று கூறுவது போலும். (4)
1. செய்யானை. அப்பர். 6. 60 - 2. " செய்யாய். " 6. 57 - 3. " காலன்வலி. " 6. 75 - 5. 2. கல்லாலின். தாயுமானவர். 42, கல்லாலின், 1.
|