529
 

(ப. இ.) வனப்பாற்றலாகிய கண்ணுடைய முதல்வியின் திருவருளால் பண்ணொடு பொருந்திய நாதமாகிய முதல் ஒலி ஆருயிர்க்குச் சிறப்புறுவதன்பொருட்டு உறவாக நிற்கும். நின்றபொழுது திருவருள் வெளியில் வீற்றிருக்கும் சிவன் விளங்கித் தோன்றுவன். ஹரீங்கார வித்தெழுத்துக்குரிய நடப்பாற்றலாகிய மண்ணுடை முதல்வி விழுச்சுடர்ச் சிவமண்டலத்தில் விளங்குவள். வனப்பாற்றல் - பராசத்தி. நடப்பாற்றல் - திரோதான சத்தி: ஆதி சத்தி; 'மறைத்துக் கொடுநிற்பது.'

(66)

1360. மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்
தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.

(ப. இ.) நவாக்கரி சக்கரமாகிய ஒளிமண்டலத்துள் மிக்கு எழுகின்ற விழுச்சுடராகிய அம்மையை அருளால் கண்டு நெஞ்சுள்ளே இடையறாது நினைமின். அவ்வம்மையின் திருஅருளால் களங்கமொழியும். மாசகற்றி அம்மை விளங்கிவருதலால், நடுநாடியினுள் அம்மையுடன் ஆருயிரும் விளங்கித் தோன்றும்.

(அ. சி.) மண்டலத்துள்ளே - நவாக்கரி சக்கரத்துள்ளே. விண்டு - களங்கம் ஒழிந்து. தண்டு அகத்து - வீணா தண்டத்துள்.

(67)

1361. தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து
ஓங்கி எழுங்கலைக் குள்ளுணர் வானவள்
ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட
வாங்கிய நாதம் வலியுட னாகுமே.1

(ப. இ.) ஓசைக்கு இடனாகவுள்ள கொப்பூழின்கண் காணப்பெறும் தாமரைமலர் மண்டலத்து விளங்கும் கலைகளுக்கு முதலாம் ஓசைமெய்க்குள் உணர்வாய்த் திகழ்பவள் அம்மை. ஆருயிர்களை வருந்தும்படி செய்யும் பிறப்பினை எவ்வாறு அறுப்பதென்று கருதி அறுத்திடத் தோன்றும் நாதம் அருளால் மேலும் மேலும் உரத்ததாய் ஒலிக்கும். ஓசைமெய் - நாத தத்துவம்.

(அ. சி.) நாபித் தடமலர் மண்டலம் - மணி பூரகம். ஏங்க - வருத்தம் உற.

(68)

1362. நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே.

(ப. இ.) நாவினுக்கு அருங்கலம் 'நமசிவய' ஆகலின் இதன்கண் குறிக்கப்படும் நடப்பாற்றல் நாவுக்கு முதல்வியாவள். அவள் அணிவது மணி அணியாகும். அவளே செல்வத்திற்கு முதல்வியாவள். பொன்


1. மூவகை. சிவஞானசித்தியார், 1. 1. 26.