(ப. இ.) மெய்ப்பொருளாகிய முப்பொருளை முறையுறச்சொல்லியருளிய திருவருளுடன் சிவபெருமான் கூடிட ஓராண்டினுள் மகிமா நிலையினர்க்கு அழிவில் திருவடியுணர்வை அறிவுறுத்தியருளிய அந்நிலை கைகூடும். தற்பொருள் - தன்பொருள்: முழுமுதற்சிவமாகிய மெய்ப் பொருள். மைப்பொருளாகும் மகிமா - மறைந்த பொருளான மகிமா. (37) 657. ஆகின்ற காலொளி யாவது கண்டபின் போகின்ற காலங்கள் போவது மில்லையாம் மேனின்ற காலம் வெளியுற நின்றன தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே. (ப. இ.) ஆகின்ற கால் - வாழ்நாட்குத் துணையாகின்ற உயிர்ப்பாகிய பிராணவாயு. ஒளியாவது - உள்ளடங்கியதால் அஃது ஒளிவண்ணமாகும். கண்டபின் - அகத்தும் புறத்தும் ஒப்பக்கண்டபின். போகின்ற....இல்லையாம் - கழிந்து போதற்குரிய வாழ்நாட்காலமாகிய (அகவை) ஆயுட்காலம் நீங்குவதில்லை. மேல்நின்ற காலங்கள் - மேன்மையுள்ளதாய் விளங்கும் காலமெய். (மெய் தத்துவம்.) வெளியுறநின்றபின் - தான் செய்யும் துணைத்தொழிலைவிட்டு அமைந்தபின். தானின்ற காலங்கள் - கழிதற்கென வரையறுக்கப்பட்ட வாழ்நாட்கள் தன் வழியாகும் - அந் நாட்கள் அகத்தவமுடையார் நினைத்தவண்ணம் ஆம். (38) 658. தன்வழி யாகத் தழைத்திடு ஞானமும் தன்வழி யாகத் தழைத்திடும் வையகம் தன்வழி யாகத் தழைத்த பொருளெலாம் தன்வழி தன்னரு ளாகிநின் றானே.1 (ப. இ.) தன்வழியாக - ஆவியின் வயமாக. ஞானமும் தழைத்திடும் திருவடியுணர்வு திகழ்ந்துவிளங்கும். வையகம.்...றானே - திருவருள் வழியின் ஆவி நிற்கும். அத்தகைய ஆவியின்வழி உலகம் செல்லும். உலகத்துப் பொருள்கள் அனைத்தும் அவன்வழியே செல்லும். (அ. சி.) தன் வழியாக - தன் வசமாக. (39) பிராத்தி (விரும்பியதெய்தல்) 659. நின்றன தத்துவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையவை யெல்லாங் கொண்டவை யோராண்டு கூட இருந்திடில் விண்டது வேநல்ல பிராத்திய தாமே. (ப. இ.) மாயகாரியமெய்களை இயக்கும் மறைப்பாற்றலுடன் நின்றனவாய், கண்டன...தாமே - காணப்படும் பூதகூட்டங்களெல்லாம் பொறைநிலையுடன் கூடவிருந்தால் ஓராண்டுப்பயிற்சியுள் எண்ணியன திண்ணமாகக் கைகூடும். பொறைநிலை - தாரணை. பூததாரணை - பூதங்
1. பண்புடையார்ப். திருக்குறள், 996.
|