மனத்துள் நாடிமுயல்வார்க்கு அவள் நன்னிலையை நல்கியருள்வள். கணிந்தெழுதல் - நாடிமுயலுதல்; சிந்தித்துமுயலுதல். கதி - நன்னிலை. (அ. சி.) உடனே - சிவத்துடனே கணிந்து சிந்தித்து. (19) 1040 .அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி புளியுறு புன்பழம் போலுள்ள நோக்கித் தெளியுறு வித்துச் சிவகதி காட்டி ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.1 (ப. இ.) அனைத்துயிர்களிடத்தும் சமமான தலையளி செய்யும் பெண்பிள்ளை. பேரின்பப் பேரழகி. மெய்யடியார் உள்ளம் புளியம் பழமும் தோடும் ஒன்றாயிருந்தும் ஒட்டுப்பற்றின்றி நிற்பதுபோல் உலகியலில் பற்றின்றிநிற்கும். அந் நிலையினைநோக்கி உண்மையினைத் தெளிவிப்பள். உயிரின் அழியாத் தன்மையினையும் சிவனுடன் கூடும் பேரின்ப நிலையினையும் காட்டுவள். அதன்பின் திருவடியுணர்வு வண்ணமாய் நம்மை ஆக்குவள். அம் முறையில் அடியேனையும் உய்யக் கொண்டாள் என்க. சித்து - அறிவு. திருவடியுணர்வு - சிவஞானம். (அ. சி.) அளியொத்த - யாரிடத்தும் சமமான கருணை. (20) 1041 .உண்டில்லை என்ற துருச்செய்து நின்றது வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தன்னொடு மண்டல மூன்றுற மன்னிநின் றாளே. (ப. இ.) கண்ணுக்கும் கை முதலிய புலன்கட்கும் புலனாவது உருவம். கண்ணுக்குப் புலனாகாத உருவம் அருவம். இவ்விரண்டினை படைத்தருள நிலையாக நின்றனள் அம்மை. தில்லைச்சிற்றம்பலத்தின்கண் என்றும் நீங்காது அருட்கூத்துநோக்கி உறைபவளும் அவளே. காரணப் பொருள்கள் அனைத்தினுக்கும் காரணமாய் நிற்கும் முதல்வி. உடல்மெய், உணர்வுமெய், உணர்த்துமெய் என்னும் மாயாகாரியத்தத்துவ மண்டலம் மூன்றினும் நிலைபெற்று இயக்கி நின்றனள். உடல்மெய் - ஆன்ம தத்துவம் இருபத்துநான்கு. உணர்வு மெய் - வித்தியா தத்துவம் ஏழு. உணர்த்து மெய் - சிவதத்துவம் ஐந்து. (அ. சி.) உண்டு, இல்லை என்றது உரு - உரு, அரு. (21) 1042 .நின்றா ளவன்றன் உடலும் உயிருமாய்ச் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே நின்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே. (ப. இ.) சிவபெருமானின் உடலும் உயிருமாக என்றும் நிற்பவள் திருவருளம்மை. மெய்யடியார்களைச் சிவனிலையில் சேர்ப்பிக்கும் வனப்பாற்றலாகிய அருளம்மை, என் நெஞ்சத்தில் கலப்பால் ஒன்றாய்ப், பொருட்டன்மையால் வேறாய், உயிர்க்குயிராதல் தன்மையால் உடனாய்ப்
அளிபுண். 8. ஆசைப்பத்து, 5.
|