557
 

1429. அன்பின் உருகுவ னாளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்
என்பினுட் சோதி இலங்குகின் றானே.

(ப. இ.) சித்தம் சிவமாய சிவபத்தன் எல்லையிலாத் தலையன்பால் உருகுவன். அவன் எந்நாளும் அடிமைப் பணி செய்தொழுகுவன். பொன் போலும். திருமேனியும் செந்தாமரையனைய திருவடியும் உடையவன் சிவன். அவன் அடியேன் முன்நின்று அருமறையருளத் திருவடியுணர்வு கைவந்த ஒரு மெய்யடியாரை ஊர்ந்து செறிந்த அறிவொளியாய் விளங்கியருள்வன். என்பு - உடல். அருமறை - உபதேசம். சித்தம் கூறவே இனக்கோளாக மனம் எழுச்சி இறுப்பு முதலியவும் கொள்ளப்படும்.

(6)


7. யோகம்
(செறிவு)

1430. நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.1

(ப. இ.) ஆசான் அருளிய அருமறைவழியே ஒழுகி அகத்தவமாகிய யோகத்தில் பொருந்தி ஆ முதலியவற்றைக் கட்டுந்தறி (தூண்) மாறுதலின்றி இருந்தாற்போல் தம் உடம்பை இருத்தித் தினவு முதலியன உடம்பில் தோன்றினும் சொறியாமலும், காற்று மழை மின்னல் இடி முதலியன உடம்பில் மோதினும் அசையாமலும் இருந்து கருதிய குறியாம் சிவத்தை அறிவார்க்கு அருளால் அச் சிவத்துடன் கூடலுமாகும்.

(அ. சி.) நெறிவழி - குரு உபதேசித்தபடி. தறி - கம்பம்.

(1)

1431. ஊழிதோ றூழி உணர்ந்தவர்க் கல்லால்
ஊழிதோ றூழி யுணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரியயன் என்றுளார்
ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே.2

(ப. இ.) ஊழிதோ றூழி பலவரினும் என்றும் ஒரு படித்தாய் நின்று நிலவும் முழுமுதற் சிவனை அவன் அருட்கண்ணால் உணர்ந்தவர்க்கல்லாமல் பலவூழிகண்டாலும் தம் அறிவால் அச் சிவனைக் காண முடியாது. சக்கரப் படையைத் தாங்கும் அரியும் அயனும் பலவூழி


1. கண்ட. 12. சண்டேசுரர், 49.

2. ஊழிதொ. ஆரூரர், 7. 100 - 10.