வினைகளும் சேரமாட்டா. சிவபெருமான் திருவடிகூடப்பெற்றால் சிவவுலக வாழ்வு சேர்வதுறுதி.. (அ. சி.) தேவர் - செவ்வாய், சுக்கிரன், புதன், வியாழன் கோள்களில் வசிப்பவர்கள் தேவர் எனப்படுவர். பூமியில் வசிப்பவர் மானிடர் எனப்படுவர். சந்திரன் முதலிய உபகோள்களில் வசிப்பவர் பிதிர்க்கள் எனப்படுவர். தெய்வத்தோடு ஒப்பர் - மானிடரே ஆயினும் தேவர் தன்மை பெற்று இருப்பவர். (5) 1623. புண்ணியன் எந்தை புனிதன் இணையடி நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது மண்ணவ ராவதும் வானவ ராவதும் அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.1 (ப. இ.) அம்மையும் அப்பனுமாக ஓருடம்பில் விளங்கும் சிவபெருமான் புண்ணியன் என்று அழைக்கப்படுவான். யாவர்க்கும் தந்தையாயுள்ளானாதலின் அவன் எந்தை எனப்படுவான். அவனே யாவரையும் தூய்மைப்படுத்தலால் அவன் புனிதமாயுள்ளான். நல்லார் அத்தகையோன் திருவடியைத் திருவைந்தெழுத்தோதிச் சேர்வர். அப்படிச் சேர்தலால் அவர்பால் திருவிளக்குச் சுடராகிய சிவஞானம் விளைந்தது. தலைமைப்பாடமைந்த சிவபெருமான் திருவருள் பெற்றபோதே மண்ணவர் பிறப்பற்றுச் சிறப்புறுவதும் சிவவுலகத்தவராகிய வானவராவதும் நிகழும். (அ. சி.) விளக்கென - விளக்கின் ஒளிபோல. (6) 1624. காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தே ரேறி மயங்கு மவையுணர் நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால் ஆயத்தே ரேறி யவனிவ னாமே. (ப. இ.) உடம்பாகிய தேரினுட் புகுந்து, மனமாகிய தேரோட்டி சேர்த்துவைக்க. மாயத் தேராகிய இவ் வுலகத்தில் மயங்கும் உயிரினங்கள் திருவடியன்பாகிய தேரேறிச் சிவபெருமான் திருவருளைப் பெற்றால் ஆயமாகிய சிவனடியார் திருக்கூட்டத்துடன் விரவி உயர்வற உயர்ந்த சிவமாம் பெருவாழ்வை எய்தும். (அ. சி.) காயத்தேர் - உடம்பு. மனப்பாகன் கைகூட்ட மனத்தோடு கூடி மாயத்தேர் - உலக வாழ்க்கை. நேயத்தேர் - நியமம் நேயம் என வந்தது. இமயம் நியமம் முதலிய ஒழுக்கங்களைக் கைக்கொண்டு. ஆயத்தேர் - சமாதி யோகம். (7) 1625. கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம் மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ் சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம் எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே.2
1. வேதநாயகன். அப்பர், 5. 100 - 1. 2. சூரியகாந். சிவஞானசித்தியார், 8 2 - 18.
|