(ப. இ.) மூலம் கொப்பூழ் மேல்வயிறு நெஞ்சம் மிடறு புருவநடு என்னும் ஆறுநிலைக்களனும் ஒன்றற்கொன்று இடை எல்லை ஒரு சாணாகும். புருவ நடுவுக்குமேல் உச்சித்துளை ஒரு சாணாகும். அதன்மேல் பரவெளி. இவற்றுள் ஆருயிர் உய்தற்பொருட்டு ஊடுருவி நிற்கும் மாணிக்கவண்ணன் சிவபெருமானாவன். இவ் வுண்மையினை அவனருளால் அளந்து காணும் கருத்தறிவாரில்லை. அவன் திருவடியுணர்வினைப் பேணி வளர்த்து அதனால் இறவா இன்ப அன்பினை வளர்த்து இடையறாது நினைவோர்க்கு மாணிக்க மலையனைய சிவபெருமான் அம் மெய்யன்பர் உள்ளம் புகுந்தருளி நிற்பன். மலை: மாலையென முதல் நீண்டது. (அ. சி.) சாணாகம் - ஆஞ்ஞை. பெருக்கு - அன்பினைப் பெருக்கி. (20) 1812. பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி இருந்தன்மை யாலுமென் நெஞ்சிடங் கொள்ள வருந்தன்மை யாளனை வானவர் தேவர் தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. (ப. இ.) பெருந்தன்மையும் பேரருளும் வாய்ந்தவன் சிவபெருமானாகிய நந்தி. ஆருயிரைப் பிணித்து மாறுபடுத்தும் அறியாமை வல்லிருள் அகல அவ் ஆண்டவன் கைக்கொள்ளும் அறவாழியாகிய நேமி என்னெஞ்சத்து வீற்றிருக்குந் தன்மையாலும் என் நெஞ்சத்திடம் நிறைவுற அவன் வரும் தன்மையாலும் அவனே உண்மையறிவு இன்ப உருவ முழுமுதல்வனாவன். அவனே சிவவுலகத்தார்க்கும் துறக்கவுலகத்தார்க்கும் வேண்டும் எல்லா வாய்ப்புகளையும் திருவருளாணையால் ஈந்தருள் பவனாகிய சிவன். அவன் திருவடியிணையினைத் தாங்கி நின்றாரே நன்னெறிச் செல்வராவர். (அ. சி.) பிணங்கு இருள் - மாறுபடும் அஞ்ஞானம். (21)
12. குருபூசை 1813. ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப் போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதார மாறா றதனின்மேற் போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே. (ப. இ.) கலப்பால் எல்லாமாய் நிற்கும் திருவாணை நந்தியின் திருவடித் தாமரையினைப் பற்றுக்கோடாகக் கொண்டு ஆருயிர் திருவடிப் பேற்றினை எய்துதற்குரிய அருமறையாகிய உபதேசம் திருவைந்தெழுத்தாகும். அதனை ஆருளால் அருளிச் செய்பவன் சிவகுருவாவன். அவனைப் பூசிக்கும் பூசை குரு பூசையாகும். அப் பூசையினையும், அகத்தே ஆறு நிலைக்களங்களில் செய்யும் வழிபாட்டினையும், அருஞ்சைவர் மெய்யாகப் பெறப்படும் முப்பத்தாறு தத்துவங்களுக்குமேல் செல்லுகின்ற மாறா
|