(ப. இ.) திங்களின் துளிதுளியாம் அமுதம் என்று சொல்லப்படுகின்ற உடற்கண் விந்து மாளுதலாகிய கட்டுப்பாட்டினை எய்த, அதுவே பெருக்கெடுத்தோடிக் கொப்பூழில் தோன்றுகின்ற சிவ அனலில் கட்டுப்படும். அப்பொழுது ஆர் அறிவில் விளைவது சிவபோகமாகும். அதனால் அவ்விடத்துத் திருவடியின்பப் பலாவனம் எய்தும். இவை அனைத்தும் அருளால் முயலும் சிவயோகியர்க்கு உண்டாம். பலாவனம்: பலாத்தோப்பு. (அ. சி.) அமுத..மாள - விந்து கட்டுப்பட அமுத....மாள - அவ்விந்து சிவாக்கினியாற் கட்டுப்பட. அமுத....யோகம் - அழிவற்ற சிவயோகம். பலாவனம் - பலாக்கனி நிறைந்த இடம். (23) 1923. யோகமவ் விந்து ஒழியா வகைபுணர்ந்து ஆகம் இரண்டுங் கலந்தாலு மாங்குறாப் போகஞ் சிவபோகம் போகிநற் போகமா மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.1 (ப. இ.) சிவபோக நுகர்வினராய யோகியர் உலகியல் வாழ்வின்படி மணந்துகொண்ட அத்தகைய சிவபோக நுகர்வினராகிய பெண்ணுடன் கூடினாலும் உடற்கூட்டமேயன்றி உளக்கூட்டம் சிவனிடத்திருப்பதால் விந்து வெளிப்படுவதினின்று, அவர், அத்துணை மனவடக்கம் அருளால் பெற்றவராவர். அக் காலத்து இருவர்க்கும் எய்துவது அன்பியற் போகமன்று. அருளியற் போகமுமன்று. ஆனால் அருள்கூட்டக் கூடும் ஆண்டான் அடியிணைசார் இன்பியற்போகமாகும். இதுவே அருளால் துய்க்கும் நற்போகமாகும். இச் செந்நெறியொழுக்கம் மேற்கொள்ளாத அறியாமையால் மூடப்பட்ட மூடர்கள் அனைவரும் ஆணவச்சார்பாமருளால் பெருமயக்குற்று மோகங்கெட ஆகம் முயங்காது ஆகங்கெட மோகம் முயங்கி விந்துவிட்டழிவர். கண்டால் கைதொட்டால் சொற்கேட்டால் கருதினால், கலவாமலே விந்து கழியும் கழிகாமுகர் மூடர். இன்பியற் போக இயல்பினர் நம்பியாரூரரும் நங்கை பரவை சங்கிலியாருமாவர். (அ. சி.) விந்து ஒழியா வகை - விந்து வெளிப்படாவண்ணம். ஆக....போகம் - ஆண் பெண் கலக்கும் காலத்திலும் விந்து வெளிப்படாமல் போகம் செய்வதுதான் சிவபோகம். (24) 1924. மாத ரிடத்தே செலுத்தினும் அவ்விந்து காதலி னால்விடார் யோகங் கலந்தவர் மாதர் உயிராசை கைக்கொண்டே வாடுவர் காதலர் போன்றங்கன் காதலாஞ் சாற்றிலே. (ப. இ.) அருளால் சிவயோகம் கைவரப்பெற்றவர் மகப்பேற்றின் பொருட்டு விந்துவினை மாதர்பால்விட நேரினும் ஏனையார்போன்று காதலால் விடார்; அருளால் விடுவர். இந் நன்னெறி வாராது புன்னெறி யொழுகுவார் தம்முயிரின்மாட்டுக் காதல்கொண்டிருப்பார் போன்று
1. தென்னாவ, தன்னையா. 12. தடுத்தாட், 181 - 2. " பண்டுநிகழ். 12. ஏயர்கோன், 267.
|