1005
 

19. உபசாந்தம்(செயலொழிவு)

2466. முத்திக்கு வித்து முதல்வன்றன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரந் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

(ப. இ.) திருவடிப் பேறாம் முத்திக்கு வித்தாகிய வாயில் திருவடியுணர்வாகிய சிவஞானமாகும். இச் சிவஞானம் பெறுதற்கும் பெற்ற பேறு நீங்காதுறுதற்கும் வாயில் அவன் திருவடியினையும் அவன் மெய்யடியார் திருவடியினையும் பணிவும் இன்சொலும் உடையனாய் நீங்கா நினைவுடன் தொழுதல். இத் தொழுகையினையே பத்திக்கு வித்தாகும் என்ப. மனம் தன் வயப்படுதலாகிய சித்திக்கு வித்து அருள்வழி நிற்றலும் அவ் வருளினை மறவாமையுமாகும். திருவருள் தானாதல் என்பது அத் திருவருளை மறவாது உடலினுள் உயிர்விரவி அடங்கி நிற்குமாறு போலத் திருவருள் நினைவால் அத் திருவருளுள் அடங்கி நிற்பதாகும். சிவபரம் - சிவனைவிட்டு நீங்காத் திருவருள். திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதம் பதிதற்கு வாயில்பொறி புலனடக்கமாகிய செயலொழிவாகும். இதனையே உபசாந்தம் என்ப.

(அ. சி.) வித்து - ஏது. வற்றல் - உன்னல். உபசாந்தம் - ஐம்பொறியடக்கல்.

(1)

2467. காரியம் ஏழுங் கரந்திடு மாயையுள்
காரணம் ஏழுங் கரக்குங் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும்முப சாந்தப் பரிசிதே.

(ப. இ.) காரியவருத்தம் (2156) ஏழும் தூவா மாயையினுள் ஒடுங்கும். காரண வருத்தம் ஏழும் தூமாயையின்கண் ஒடுங்கும். காரிய காரண வருத்தங்களின் வாதனைப்பற்றாகிய பசையறத் திருவருட் பெருமை வந்து தலைப்படும். அது தலைப்படுதலே ஒடுக்கமென்னும் உபசாந்தமாகும். இவ்விளக்கமே அதன் பரிசாகும்.

(அ. சி.) கரந்திடும் - ஒடுங்கும். மாயையுள் - அசுத்தமாயையில். கடுவெளி - சுத்தமாயை. பாரணவும் - பெருமை பொருந்தும்.

(2)

2468. அன்ன துரியமே யாத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னு பரங்காட்சி யாவ துடனுற்றுத்
தன்னின் வியாத்தி தனின்உப 1சாந்தமே.

(ப. இ.) ஒடுக்கச் செயலறலாகிய துரியமே ஆவித் தூய்மையாகும். பொருந்திய நனவினில் அப்பால் சிவனருளின்பமாகும். நிலைபெற்ற


1. ஊனக்கண். சிவஞானபோதம், 9.