250
 

549. பிராணன் மனத்தோடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை.
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.

(ப. இ.) பிராணனாகிய உயிர்ப்புச் சிவகுருவினருளால் மனத்துடன் பொருந்தி அடங்கி இருக்குமானால் பிறப்பு இறப்பு இல்லை. உயிர்ப்பானது வலப்பால் இடப்பால் நாடிகளாகிய பிங்கலை இடைகலைகளில் மாறிமாறிப் போய் வருமானால், பேச்சுமுண்டாகும். அதனால் இறப்பும் பிறப்பும் இறவாது வந்துகொண்டிருக்கும். பேராது - பிரியாது. நடை பேறு - போதல், வருதல், (இறத்தல் பிறத்தல்).

(அ. சி.) மடைமாறி - இடைகலை - பிங்கலைகளை மாறிமாறி.

(4)

550. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

(ப. இ.) வளிநிலையாகிய மூச்சுப்பயிற்சி முறை இதிற் காணப்படுகிறது. ஏறுதல் - பூரகம். ஆறுதல் - கும்பகம். ஊறுதல் - இரேசகம். பூரகம் - உள்ளிழுத்தல். கும்பகம் - அடக்குதல். இரேசகம் - வெளிவிடுதல். வாமம் - இடகலை; இடமூக்கு. ஈரெட்டு - பதினாறுமாத்திரை, அறுபத்து நாலு மாத்திரை, முப்பத்திரண்டு மாத்திரை. இப் பயிற்சிக்குச் 'சிவ சிவ' என்னும் செந்தமிழ்த் திருமாமறை முடிவினை நான்குமுறை கணித்துத் தூய காற்றை உள்வாங்குதல் வேண்டும். அதுபோல 'சிவசிவ' என்பதனைப் பதினாறுமுறை கணித்து இரண்டு மூக்கையும் அடைத்து உள் நிறுத்துதல் வேண்டும். பின் 'சிவசிவ' என எட்டுமுறை கணித்து வலமூக்கைத் திறந்து வெளிவிடுதல் வேண்டும். இம்முறையே இடமூக்கிலும் பயிலுதல் வேண்டும் இவ்வாறு மாறிமாறி இயன்ற அளவு செய்தல் வேண்டும். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.

(அ. சி.) மாறுதல் - மடைமாறுதல்.

(5)

551. வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.

(ப. இ.) அகத்தவப் பயிற்சியால் உயிர்ப்பினை வாங்கி உந்திக்கண் அடக்கி வயப்படுத்தினால் உடம்புக்கு காலவரையறைப்படி ஏற்படும் முதுமை புறத்துக் காணப்படினும் அகத்து முதுமைப்பண்பு ஒருசிறிதும் காணப்படமாட்டாது. அதற்கு மாறாக இளமைப்பண்பு கிளர்ந்தெழுந்து கொழுந்துவிடும். அதனையே பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் என்று ஓதினர். அகத்துப்பண்பு இளமையாகப் புறத்துப் பொலிவு முதுமையாவது எதன்பொருட்டெனின்? அவர்தம் பயிற்சியின் சிறப்பும்