814. வெள்ளி யுருகிப் பொன்வழி ஒடாமே கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே.1 (ப. இ.) இப் பரியங்க யோகப் பயிற்சி கைவராதவர் சிலர் கை வந்தார் போன்று நடிப்பர். அவர்கள் கள்ளத்தட்டார் எனப் பெயர் பெறுவர். அவர்களுக்கு வெள்ளி உருகிப் பொன்னாகிய நாதவழி ஓடும். இதனை அவர்கள் மனச்சான்று நன்குணர்த்தும். என்றாலும் அவர்கள் அதனை மறைத்து வைப்பர் அவர்கள் வஞ்சனையாகக் கொண்ட அக் கொள்கை வெளிப்படக் குழலாகிய குறிவழியே சென்று ஒழுகிவிடும். இதனைப் பிறர்குற்றமாகிய அற்றமறைக்கும் பெரியவர் வெளிப்படுத்தாது தங்கள் அழகிய நாவில் அடக்கி வைத்துக்கொள்வர். வள்ளியல் - அழகு பொருந்திய. (அ. சி.) வெள்ளி - விந்து. பொன் - நாதம். கள்ளத் தட்டான் - யோகிபோல் நடிப்பவன். கரி - சாட்சியான மனம். குழல் - இலிங்கம்; ஆண் குறி. (10) 815. வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன் சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம் பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும் வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே. (ப. இ.) இப் பரியங்க யோகப் பயிற்சி கைவந்த இருவரும் எண்ணம் சிறிதும் கலங்காது செய்கின்ற வாழ்க்கைஇன்பம் ஏனையோர்க்கு விளக்கந் தருவதாகும். அதனால் அவர்கள் புறவிருள் போக்குகின்ற வெங்கதிரவன்போல் பத்துப் புலன்களில் உள்ளவர்க்கும் பதினெட்டுக் குழுவிலுள்ளவர்க்கும் ஒட்டிய அகவிருளகற்றும் செயற்கரிய ஒண்மையராய்த் திகழ்வர். பத்துப்புலம் - பத்துத்திசை. வித்தகன் - செயற்கரிய செய்வோன். (அ. சி.) பதினெண் கணம் - உலகிலுள்ள 18 வகைத் தொழிலாளர். கூட்டங்கட்கும். (11) 816. வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந் தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந் திங்களிற் செவ்வாய் புதைத்திருந் தாரே. (ப. இ.) பகலவ மண்டிலப் பண்ணவனாகிய அருளோன் - சதா சிவனுக்கும், அவர்தம் கீழ் நோக்கிய பகுதியிற் காணும் சனிக்கும் இடையே நின்ற நங்கையாகிய மனோன்மனியைக் கண்டு கலந்த ஆண்டாற்கு ஒப்பிலாத பேரின்பம் உண்டாம். தங்களுள் பொன்னாகிய
1. அற்றம். திருக்குறள், 980. அரவ. அப்பர், 5. 97 - 26.
|